Last Updated:
தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் வெனிசுலா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
வெனிசுலா இடைக்கால அதிபர் அமெரிக்காவிற்கு ஒத்துழைக்காவிட்டால் மதுரோவை விட அதிக விலை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ள அதிபர் டிரம்ப், கொலம்பியா மீது ராணுவ நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட நிலையில், துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால அதிபராக நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நிகோலஸ் மதுரோவை விடுவிக்க செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க தனது சகோதரர் ஜார்ஜ், வெளியுறவு அமைச்சர் யுவான் கில் உள்ளிட்டோர் அடங்கிய தனி ஆணையத்தை அமைத்து டெல்சி ரோட்ரிக்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து வாஷிங்டன் நகருக்கு பயணிக்கும்போது விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மேலும் பல ராணுவ நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும், தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் வெனிசுலா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், வெனிசுலாவில் தாங்கள் அதிகாரத்தில் இருப்பதாகவும் டிரம்ப் கூறினார். வெனிசுலாவைத் தொடர்ந்து கொலம்பியா மீதும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார். கொலம்பியா அதிபர் கொகைன் போதைப் பொருட்களை அமெரிக்காவிற்கு கடத்த உதவி செய்வதாகவும், அவர் அதை நீண்ட நாட்கள் செய்ய முடியாது என்றும் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


