Last Updated:
தற்போது ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ள கருத்துகள் பொருளாதார வல்லுனர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி உலகளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரபல முதலீட்டாளரும், Rich Dad Poor Dad என்ற பிரபல புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.
அவர் சமீபத்தில் ‘X’ (முன்பு ட்விட்டர்) தளத்தில், “பெரும் வீழ்ச்சி வருகிறது: நான் ஏன் விற்காமல் வாங்குகிறேன்” என்று பதிவிட்டதோடு, அமெரிக்க கருவூலத் துறையும் பெடரல் ரிசர்வும் தொடர்ந்து “போலிப் பணத்தை அச்சிடுகின்றன” என்று நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
அச்சிடப்படும் இந்தப் போலிப் பணமே பொருளாதாரச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்றும், இந்த நிலை நீடித்தால் சந்தை வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும், கியோசாகி இந்த வீழ்ச்சி குறித்து எச்சரிக்கை விடுப்பதுடன் நிற்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்ப்பதாகவும் கூறினார்.
சந்தை வீழ்ச்சி என்பது முதலீடுகளைக் குறைந்த விலையில் குவிக்க ஒரு பொன்னான தருணம் என்று நம்பும் அவர், 2026ஆம் ஆண்டுக்குள் தங்கம் மற்றும் பிட்காயின் ஆகிய இரண்டும் எவ்வளவு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தங்கம் ஒரு அவுன்ஸுக்கு (தோராயமாக 28.35 கிராம்) $27,000 சுமார் 24 லட்ச ரூபாய் என்ற வியக்கத்தக்க இலக்கையும், பிட்காயின் ஒரு நாணயத்திற்கு $250,000 அதாவது ரூ. 2.21 கோடி என்ற அதிர்ச்சியூட்டும் இலக்கையும் எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், கியோசாகி சந்தை வீழ்ச்சியின் போதும் பாரம்பரியமற்ற, கட்டுப்படுத்தப்படாத சொத்துக்களில் (தங்கம் மற்றும் பிட்காயின்) முதலீடு செய்வதன் மூலம் செல்வத்தைப் பாதுகாக்க முடியும் என்ற தனது நீண்டகால நிதித் தத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறார்.
November 10, 2025 8:00 PM IST
மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி உலகளவில் ஏற்படலாம்.. பிரபல முதலீட்டாளர் ராபர்ட் கியோசாகி எச்சரிக்கை


