Last Updated:
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பரப்புரைக் கூட்டத்தில் திமுக கனவு பலிக்காது என்று தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பின்னர் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்ற திமுகவின் கனவு பலிக்காது என தெரிவித்தார்.
அரசு விழாவிலும், தேர்தல் பரப்புரையிலும் பங்கேற்க மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வழிபாடு நடத்திய காட்சிதான் இது. மேள தாளங்கள் முழங்க கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் முருகன் சந்நிதியில் மனமுருக வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, கொடிமரம் முன்பு கீழேவிழுந்து வணங்கினார். கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமருக்கு முருகன் படம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, மதுரை மண்டேலா நகரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். என்.டி.ஏ. சார்பில் நடைபெற்ற இந்த இரண்டாவது பரப்புரைக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, மதுரையில் மாஃபியா ஸ்டைல் ஆட்சி நடப்பதாக பிரதமர் குற்றஞ்சாட்டினார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சித்த பிரதமர், ஜெயலலிதா ஆட்சியை புகழ்ந்தார். அரசியல் நேர்மைக்கு நாட்டுக்கே முன்னுதாரணமாக காமராஜர் இருந்த நிலையில், தற்போதைய திமுக அரசு அதற்கு நேர்மாறான எடுத்துக்காட்டாக இருப்பதாக கூறினார். திமுக கனவு பலிக்காது எனவும், தமிழ்நாட்டில் என்.டி.ஏ. ஆட்சி அமையும் எனவும் பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.
முன்னதாக பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி அமையும் என்றார். அண்மையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் திமுகவில் இணைந்த நிலையில், தென் மாவட்டங்களில் அதிமுக பலமாக இருப்பதாக குறிப்பிட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்புவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
Madurai,Tamil Nadu


