அலோர் ஸ்டார் | மார்ச் 28, 2026
மலேசியாவை வாட்டி வதைக்கும் கடும் வெயில் ஒருபுறம் மக்களைப் பாடாய்ப்படுத்தினாலும், மறுபுறம் இயற்கையின் விசித்திரமான சில சம்பவங்களையும் அரங்கேற்றி வருகிறது. அந்த வகையில், கெடா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் எவ்வித அடுப்பு உதவியுமின்றி வெறும் சூரிய வெப்பத்திலேயே முட்டை சமைத்துக் காட்டிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
கெடாவின் பாடாங் தெராப் (Padang Terap) பகுதியில் தற்போது ‘நிலை 2’ (Level 2) வெப்ப அலை வீசி வருகிறது. சுமார் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், அந்தப் பெண் ஒரு சோதனையாகக் காலி வாணலியைத் தனது வீட்டின் மொட்டை மாடியில் வைத்துள்ளார்.
சரியாக ஒரு மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்த அந்த வாணலியில், அவர் ஒரு முட்டையை உடைத்து ஊற்றினார்.
ஆச்சரியப்படும் விதமாக, சில நிமிடங்களிலேயே அந்த முட்டை தானாகவே வெந்து ‘ஹாஃப் பாயில்’ (Half Boil) நிலைக்கு வந்தது. அடுப்பு எரிக்காமலேயே முட்டை வெந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் வியப்படைந்தனர்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இனி கேஸ் சிலிண்டர் செலவு மிச்சம் போல!” என கிண்டலாகக் கூறினாலும், நிலவும் அதீத வெப்பம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர்.
வெறும் சூரிய வெப்பத்திலேயே முட்டை வேகும் அளவுக்கு உஷ்ணம் அதிகமாக இருப்பது, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதோடு உடல்நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்க்குமாறும், இது
வெப்பத்தாக்கு (Heatstroke) போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
நீர் நிலைகள் வற்றி வருவதால் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.




