Last Updated:
கடந்த ஒரு வாரமாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான மொஹ்சின் நக்வி சர்ச்சைக்குரிய நபராக மாறி உள்ளார்
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பொறுப்பில் செயல்படுங்கள் அல்லது உள்துறை அமைச்சராக இருங்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யாதீர்கள் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியை முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான மொஹ்சின் நக்வி சர்ச்சைக்குரிய நபராக மாறி உள்ளார். அவர் பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றது.
இதன்பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் என்கிற முறையில் நக்வி கோப்பையை இந்திய அணியிடம் வழங்கவிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அணி வீரர்கள் பரிசளிப்பு விழாவை புறக்கணித்து கோப்பை இல்லாமல் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து ஆசிய கோப்பை மொஹ்சின் நக்வியின் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நக்வியின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி கூறியிருப்பதாவது-
இந்த தருணத்தில் மொஹ்சின் நக்வி மிகவும் முக்கியமான பொறுப்புகளை வகித்து வருகிறார். அதாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் நாட்டின் உள்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். இரண்டுமே மிகவும் வித்தியாசமான வேறுபாடுகள் கொண்ட பொறுப்பாக உள்ளன. இந்த தருணத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு முழுமையான கவனத்துடன் செயல்படும் நபர் தலைவராக இருக்க வேண்டும்.
வெறுமனே ஆலோசகர்களை மட்டுமே வைத்துக் கொண்டு இரண்டு பெரும் பொறுப்புகளில் நக்வியால் சிறப்பாக செயல்பட முடியாது. அவருக்கு இன்னும் திறமை வாய்ந்த ஆலோசகர்கள் விளையாட்டை நன்றாக புரிந்தவர்கள் தேவைப்படுகிறார்கள்.
October 02, 2025 6:50 PM IST


