சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இங்கிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் 79 ரன்களில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது.
இலங்கையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது இந்தியா. இந்திய அணியின் பேட்ஸ்மேன் யோகேந்திர படோரியா, 40 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அசத்தினார். 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.
198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியை ரன் குவிக்க முடியாத வகையில் பந்து வீசினர் இந்திய பவுலர்கள். இங்கிலாந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய பவுலர் ராதிகா பிரசாத், 3.2 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். கேப்டன் விக்ராந்த் மற்றும் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டுக்கு சாதனையாகும். மேலும், மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களின் நம்பமுடியாத திறமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. “இந்த தொடர் முழுவதும் வீரர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தி இருந்தனர். கள சூழல் மற்றும் சவால்கள் என அனைத்தையும் கடந்து வந்தனர். இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. சிறந்த கிரிக்கெட் ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வென்ற கோப்பை இது” என அணியின் தலைமை பயிற்சியாளர் ரோஹித் ஜலானி தெரிவித்தார்.

