Last Updated:
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் நுகர்வோருக்கான உள்நாட்டு எல்பிஜி சிலிண்டரின் விலை ஆகஸ்ட் 2023-ல் ரூ.903 இலிருந்து பிப்ரவரி 2025-ல் ரூ.503 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி 10.33 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் மொத்த உள்நாட்டு எல்பிஜி நுகர்வோரின் எண்ணிக்கை 32.94 கோடியாக உள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் எல்பிஜி சிலிண்டரின் சராசரி விலை ஜூலை 2023 இல் $385/மெட்ரிக் டன் என்ற விலையிலிருந்து பிப்ரவரி 2025-ல் $629/மெட்ரிக் டன் என்று 63 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் நுகர்வோருக்கான உள்நாட்டு எல்பிஜி சிலிண்டரின் விலை ஆகஸ்ட் 2023-ல் ரூ.903 இலிருந்து பிப்ரவரி 2025-ல் ரூ.503 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
இந்தியா உள்நாட்டு எல்பிஜி நுகர்வுகளில் சுமார் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை தற்போது டெல்லியில் ரூ.1,103 ஆக உள்ளது. PMUY நுகர்வோருக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.600 மானியம் இலக்கு வைக்கப்பட்ட நிலையில், 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர்களை ஒரு சிலிண்டருக்கு ரூ.503 என்ற விலையில் (டெல்லியில்) மத்திய அரசு வழங்குகிறது. இது நாடு முழுவதும் 10.33 கோடிக்கும் மேற்பட்ட உஜ்வாலா பயனாளிகளுக்கு கிடைக்கிறது.
நாடு முழுவதும் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த வயது வந்த பெண்களுக்கு வைப்புத்தொகை இல்லாத எல்பிஜி இணைப்பை வழங்கும் நோக்கத்துடன் PMUY திட்டம் மே 2016-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 8 கோடி இணைப்புகள் 2019 செப்டம்பரில் அடையப்பட்ட நிலையில், உஜ்வாலா 2.0 என இந்த திட்டம் மீதமுள்ள ஏழைக் குடும்பங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.
இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் கவரேஜ் ஏப்ரல் 2016-ல் 62 சதவீதமாக இருந்தது. தற்போது இது கிட்டத்தட்ட நூறு சதவிகிதத்திற்கு அருகில் உள்ளது என்று அமைச்சர் கூறினார். எல்பிஜி சிலிண்டர் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளில் PMUY திட்டம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான பிரச்சாரங்களை ஏற்பாடு செய்தல், இணைப்புகளைப் பதிவு செய்து விநியோகிக்க முகாம்களை ஏற்பாடு செய்தல், வீட்டிற்கு வெளியே விளம்பரப் பலகைகள், ரேடியோ மூலம் விளம்பரப்படுத்துதல் மற்றும் www.pmuy.gov.in தளத்தில் PMUY இணைப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை வழங்குதல் ஆகியவை அடங்கும் என்று அமைச்சர் கூறினார்.
பல்வேறு சுயாதீன ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள், PMUY திட்டம் கிராமப்புற குடும்பங்களின் வாழ்க்கையில், குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பெண்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளன.
தூய்மையான எரிபொருளைப் பயன்படுத்துவது உட்புற காற்று மாசுபாட்டைக் குறைக்கிறது. குறிப்பாக பாரம்பரியமாக வீட்டுப் புகைக்கு ஆளாகும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்கள், குறிப்பாக தொலைதூர இடங்களில் உள்ளவர்கள், பாரம்பரிய சமையல் எரிபொருட்களை சேகரிப்பதில் பெரும்பாலும் தங்கள் நேரத்தையும் சக்தியையும் கணிசமான அளவு செலவிடுவதை இது குறைக்கிறது.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் சமையல் செய்வதற்கு செலவிடும் நேரத்தையும், கடின உழைப்பையும் எல்பிஜி சிலிண்டர் குறைத்துள்ளது. இதனால், அவர்களின் ஓய்வு நேரத்தை, பொருளாதார உற்பத்தித்திறனை மேம்படுத்த பல துறைகளில் பயன்படுத்தலாம்.
April 07, 2025 10:47 AM IST
மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர் .. பயன்பெறும் 10 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள்.. அமைச்சர் தகவல்!


