மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “புலம்பெயர்ந்த மேற்குவங்க தொழிலாளர்கள் மீண்டும் மாநிலம் திரும்பினால், மாதம் ரூ. 5,000 மறுவாழ்வு உதவித்தொகை அவர்களுக்கு வழங்கப்படும். மேலும் அவர்களின் திறன்களின் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக மேற்குவங்கத்தினர் மீது மொழி ரீதியாக தாக்குதல் நடத்தப்படுவதாகவும், அவர்கள் சிறைப்படுத்தப்படுவதாகவும், அதுவும் பாஜக அல்லது என்.டி.ஏ. ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் இவை நடப்பதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை மேற்குவங்க ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் முன்வைத்து வருகிறது.
இந்தச் சூழலில், புலம்பெயர்ந்துள்ள மேற்குவங்க தொழிலாளர்கள் மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்பினால், அவர்களுக்கு மாதம் ரூ. 5,000 மறுவாழ்வு உதவித்தொகை, அவர்கள் திறன்களுக்கு ஏற்றபடி வேலை பயிற்சி, அவர்கள் குழந்தைகளுக்கான கல்வி ஏற்பாடு உள்ளிட்ட ஏராளமான அறிவிப்பை முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “நம் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 22 லட்சம் பேரும், அவர்களின் குடும்பத்தினரும் வங்க மொழியை பேசுவதால் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். வங்க மொழியை பேசுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, குற்றவாளிகளை போல் நடத்தப்படுகின்றனர். மேலும் அவர்கள் சிறையில் தள்ளப்படுகிறார்கள்.
திரும்பி வரும் வங்காளத் தொழிலாளர்கள் மொழி ரீதியான துன்புறுத்தல் மற்றும் துன்புறுத்தல் காரணமாக உதவியற்ற நிலையில் உள்ளனர். அவர்கள் குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள். அதனால், நாங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளோம்.
மாநிலத்திற்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒரு முறை பயண உதவித்தொகையுடன் ரூ. 5,000 வழங்கப்படும். மேலும், இந்த ரூ. 5,000 ஒரு வருட காலத்திற்கோ அல்லது அவர்களுக்கு புதிய வேலை ஏற்பாடு செய்து தரப்படும் வரையில் வழங்கப்படும்.
அவர்களின் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் இல்லாமல் தொடர்வதற்கு அரசு பள்ளிகளில் அவர்களுக்கான சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மேற்கு வங்கத்தின் மற்ற தகுதியான அரசு நலத்திட்டங்களும் அவர்கள் அனுபவிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தினர் வங்க மொழி பேசுவதால் தாக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு அம்மாநிலத்தில் ஏற்கனவே இருந்து வருகிறது. குறிப்பாக 2026ல் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
August 18, 2025 8:14 PM IST
“மாதம் ரூ. 5,000 உதவித்தொகை.. வேலைக்கான ஏற்பாடு” – புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் மேற்குவங்கத்திற்கு அழைக்கும் மம்தா பானர்ஜி

