பூச்சோங் தாமான் மாஸில் பலத்த மழை பெய்யும் போதெல்லாம், குறிப்பாக 29 மாடி கோய் பிரிமா அடுக்குமாடி கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கு, மழையுடன் பயமும் வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
2021ஆம் ஆண்டு சிலாங்கூர் வெள்ளத்திற்குப் பிறகு மீண்டும் மீண்டும் ஏற்பட்ட நீர் சேதம் கட்டிடத்தின் அடித்தளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிய அச்சம் உள்ளது. “மழை பெய்யும் போதெல்லாம், நாங்கள் பயத்தில் வாழ்கிறோம்,” என்கிறார் கோய் பிரிமா குடியிருப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் யோகேந்திரன் கிருஷ்ணன்.
வெள்ள நீர் வடிந்த பிறகும் குடியிருப்பாளர்களின் பிரச்சினைகள் தீரவில்லை, ஏனெனில் மின்தூக்கி (லிப்ட்) சேதமடைந்துள்ளது என்று யோகேந்திரன் கூறினார்.
நீர் மட்டம் ஒரு அடிக்கு குறைவாக உயர்ந்தாலும், லிஃப்ட் சேதமடைகிறது. லிஃப்ட் இரண்டு நாட்கள் அல்லது அதற்கு மேல் இயங்கவில்லை என்றால் ஏற்படும் சிரமத்தை கற்பனை செய்து பாருங்கள் என்று அவர் கூறினார்.
மற்றொரு குடியிருப்பாளரான குகன் ரவி, நீர் மட்டம் உயரத் தொடங்கும் போதெல்லாம் தீ எச்சரிக்கையை ஒலிக்க வைக்கிறோம் என்று எஃப்எம்டியிடம் கூறினார், இதனால் தரை தளத்திலோ அல்லது சாலை மட்டத்திலோ தங்கள் வாகனங்களை நிறுத்திய குடியிருப்பாளர்கள் உயர்ந்த நிலத்தில் அவற்றை மீண்டும் நிறுத்த முடியும்.
வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் மீட்புக் குழு ஒன்று செயலில் இறங்கும். இரவில் குடியிருப்பாளர்களை எழுப்பி, உயரும் நீர் மட்டம் குறித்து எச்சரிக்கும்.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடைசி பெரிய வெள்ளத்திற்குப் பிறகு, சேதமடைந்த பொதுச் சொத்துக்களை சரிசெய்ய குடியிருப்பாளர்கள் ஆரம்பத்தில் மொத்தம் 3 மில்லியன் ரிங்கிட் செலவிட வேண்டியிருந்தது. இருப்பினும் பின்னர் கட்டிடத்தின் காப்பீட்டாளர்களால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது என்று குகன் கூறினார்.
அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கு சில குடியிருப்பாளர்களை வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளது என்றும், சொத்தின் மதிப்பும் அசல் விற்பனை மதிப்பில் பாதியாகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.


