Last Updated:
இந்த காய்கறிகள் விளைவிக்கப்படும் சூழ்நிலைகள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் பொதுமக்களுக்கு பெரும்பாலும் தெரியாமல் உள்ளன. குறிப்பாக கோடைகாலங்களில் மலைப்பகுதிகளில் விவசாயம் செய்வது மிகவும் சவாலான ஒன்றாகும்.
நீலகிரி மாவட்டம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், மலை காய்கறி உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் மாவட்டமாகவும் திகழ்கிறது. இப்பகுதியின் தனித்துவமான காலநிலை காரணமாக பல்வேறு காய்கறி வகைகள் இங்கு பரவலாக பயிரிடப்படுகின்றன.
கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ், அவரை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் இங்கு விளைவிக்கப்பட்டு, உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆனால், இந்த காய்கறிகள் விளைவிக்கப்படும் சூழ்நிலைகள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் பொதுமக்களுக்கு பெரும்பாலும் தெரியாமல் உள்ளன. குறிப்பாக கோடைகாலங்களில் மலைப்பகுதிகளில் விவசாயம் செய்வது மிகவும் சவாலான ஒன்றாகும்.
பொதுவாக மலை காய்கறி பயிர்களுக்கு அதிக அளவு நீர் தேவைப்படுகிறது. இதனை சமாளிக்க, சமீப காலங்களில் சொட்டு நீர் பாசன முறை (Drip Irrigation) அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் தண்ணீர் நேரடியாக செடிகளின் வேர் பகுதிக்கு அளவாக வழங்கப்படுவதால், நீர் வீணாகாமல் சேமிக்க முடிகிறது.
மேலும், விவசாயிகள் போர்வெல் பம்புகள் மூலம் நீரை எடுத்து பயன்படுத்துவதோடு, குளங்களில் நீரை சேமித்து வைத்தும், மழையை நம்பியும் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் சமீப காலங்களில் போர்வெல் பகுதிகளில் கூட நீர் வற்றத் தொடங்கியுள்ளது. மழை இல்லாததால் குளங்களிலும் நீர்மட்டம் குறைந்து வருவதால், பயிர்களுக்கு தேவையான அளவு நீரை வழங்குவது கடினமாகியுள்ளது.
நீர் பாசன முறைகள் குறித்து விவசாயிகள் ஆனந்த், ராஜேந்திரன் மற்றும் சிவகுமார் தெரிவித்ததாவது: “விவசாய விளைபொருட்களின் விலையும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. மழை இல்லாததால் விவசாயம் செய்வது மிகவும் சிரமமாகியுள்ளது. சரிவான பகுதிகளில் விவசாயம் செய்பவர்களுக்கு அதிக நீர் தேவைப்படுகிறது. மழை பெய்தால்தான் விவசாயம் செழிக்கும்; இல்லையெனில் அடுத்த பருவத்தில் காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்,” என்றனர். இதனால், நீர் மேலாண்மை மற்றும் பாசன முறைகளை மேம்படுத்துவது மலை காய்கறி விவசாயத்தின் நிலைத்தன்மைக்கு மிகவும் அவசியமாகியுள்ளது.
Apr 25, 2026 10:38 AM IST

