ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகிய நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ராஜா ரகுவன்ஷியும் சோனமும் தேனிலவுக்காக பெங்களூருவில் இருந்து மேகாலயாவிற்கு புறப்பட்டபோது கூலிப்படையினர் புதுமணத் தம்பதியை பின்தொடர்ந்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக சோனத்தின் காதலர் ராஜ் குஷ்வாகா, இந்தூரிலேயே தங்கிவிட்டார்.
கடந்த 23 ஆம் தேதி ராஜா ரகுவன்ஷியும் சோனமும் நோங்கிரியாட் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு புதுமணத் தம்பதி தங்கியிருந்த விடுதிக்கு அருகிலேயே கூலிப்படையினரும் தனியாக வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் அங்குள்ள அருவியை சுற்றிப் பார்க்க புதுமணத் தம்பதியினர் சென்றனர். அவர்களுடன் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உடன் சென்றார். தனிமையில் பொழுதை கழிக்க வேண்டும் என்று கூறி அந்த சுற்றுலா வழிகாட்டியை சோனம் திருப்பி அனுப்பியுள்ளார். பின்னர் செல்பி எடுக்க வேண்டும் என்று கூறி மலை உச்சிக்கு கணவர் ராஜா ரகுவன்சியை, சோனம் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது கூலிப்படையை சேர்ந்த ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் பின்தொடர்ந்து வந்து ராஜா ரகுவன்ஷியை கொடூரமான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். கூலிப்படையினருடன் சோனமும் இணைந்து ராஜா ரகுவன்ஷி உடலை சுமார் 200 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு இருசக்கர வாகங்களில் அங்கிருந்து தப்பியுள்ளனர். ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக சோனம் வாக்குறுதி அளித்திருப்பது புலன் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் நோங்கிரியாட்டில் உள்ள சுற்றுலாத் தலத்திற்கு செல்வதற்காக முன்பாக புதுமணத் தம்பதியினர் சோரா(sohra) பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு தங்குவதற்கு அறை கிடைக்காததால் தங்களது சூட்கேஸை அங்கேயே வைத்துவிட்டு நோங்கிரியாட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சோனம் தனது தாலி மற்றும் மோதிரத்தை சூட்கேஸிலேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளார். புதுமணப் பெண் சூட்கேஸில் தாலியை கழற்றி வைத்துவிட்டுச் சென்றதும், சுற்றுலா வழிகாட்டியின் வாக்குமூலமும் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.
சோனம் தனது காதல் குறித்து தன்னுடைய தாயாரிடம் திருமணத்திற்கு முன்பே கூறியுள்ளார். ராஜா ரகுவன்ஷியுடன் திருமணம் செய்து கொடுத்தால் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் சோனம் எச்சரித்தது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், அதையும் மீறியே அவரது தாயார் ராஜா ரகுவன்ஷிக்கு திருமணம் செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சோனமின் சகோதரர் கோவிந்த், இந்தூரில் உள்ள ராஜா ரகுவன்ஷி இல்லத்துக்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரினார். தனது சகோதரி உடனான உறவை தாங்கள் முறித்துக்கொண்டதாகவும், தனது சகோதரி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரை தூக்கில் போட வேண்டும் என்றும் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் கைதானவர்கள் அனைவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சோனம் உட்பட ஐந்து பேரும் ஷில்லாங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஐந்து பேருக்கும் 8 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார். குற்றவாளிகளிடம் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
June 12, 2025 7:12 AM IST
”மலை உச்சியில் செல்ஃபி எடுக்க ஆசை” மேகாலயா தேனிலவு கொலை வழக்கில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள்

