புத்ராஜெயா, மார்ச் 4:
மலேசியாவின் சொத்துப் பரிவர்த்தனை மதிப்பு 2025-ஆம் ஆண்டில் 240 பில்லியன் ரிங்கிட்டை எட்டி, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இத்தகவலை வெளியிட்ட வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், நாட்டின் பொருளாதாரத் தூணாக இத்துறை உருவெடுத்துள்ளதை உறுதிப்படுத்தினார்.
2023-ஆம் ஆண்டில் 180 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த பரிவர்த்தனை மதிப்பு, தற்போது மிகக்குறுகிய காலத்தில் 240 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.
“மலேசிய நிலச்சொத்துத் துறை பாதிப்பிலிருந்து மீண்டது மட்டுமல்லாமல், தற்போது தேசியப் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் ஒரு முக்கிய இயந்திரமாக மாறியுள்ளது,” என அமைச்சர் தெரிவித்தார்.
மத்தியக் கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் மலேசியாவின் கட்டுமானத் துறையைப் பாதிக்காமல் இருக்க அமைச்சு தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். குறிப்பாக, ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து அவர் கவலை வெளியிட்டார்.




