கோலாலம்பூர், பிப்ரவரி 12, 2026:
மலேசிய இந்தியச் சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், ‘வெற்றி மடானி’ (Vetri MADANI) திட்டத்தின் கீழ் தொழில்முறைப் பயிற்சிகளை விரிவுபடுத்தப் போவதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அறிவித்துள்ளார்.
இத்திட்டம் TalentCorp மற்றும் மனிதவள மேம்பாட்டுக் கழகம் (HRD Corp) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்றும், தற்போது மலேசிய இந்திய திறன் முன்முயற்சி 2.0 (MISi 2.0) திட்டத்திற்காக RM4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை தேவைகளுக்கேற்ப வரும் நாட்களில் இருமடங்காக அதிகரிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
முந்தைய MISi 2.0 திட்டத்தில் பங்கேற்ற 400 பேரில் 300 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அவர்களின் மாதச் சம்பளம் RM3,000 முதல் RM7,500 வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் (Engineering) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிகத் தேவையுள்ள துறைகளில் இந்திய இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, அதிகச் சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதே இத்திட்டத்தின் நோக்கம்.
பொதுமக்களின் வரவேற்பைக் கணக்கிடுவதற்காகப் பதிவு விரைவில் திறக்கப்படும். அதன் பின்னரே இறுதி நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்று அவர் சொன்னார்.




