கோலாலம்பூர் :
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேரள மாநிலத்தின் கோழிக்கோடு நகருக்கு விஜயம் செய்துள்ளார்.
இப்பயணத்தின் போது, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோரைச் சந்தித்துப் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
வணிகம், முதலீடு, சுற்றுலா, மருத்துவம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் மலேசியா – கேரளா இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இச்சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
மேலும், இந்திய அளவிலான உறவுகளைத் தாண்டி, மாநில அளவிலான வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னணி இந்திய தொழில் அதிபர்களுடனும் அவர் தனியாகக் கலந்துரையாட உள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இப்பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று இரவு, கோழிக்கோட்டில் உள்ள ‘ஜாமியா மர்க்கஸ்’ (Jamia Markaz) மையத்திற்கு விஜயம் செய்த பிரதமர் அன்வார் இப்ராஹிம், அங்கு நடைபெற்ற சிறப்பு மார்க்க அறிஞர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.



