கோலாலம்பூர் | மார்ச் 15, 2026:
கடந்த ஆண்டு மலேசியா முழுவதும் போதைப்பொருள் பழக்கத்திற்குச் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 191,832-ஆகப் பதிவாகியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் (192,857) ஒப்பிடும்போது 0.5 விழுக்காடு சரிந்துள்ளது.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமையின் (AADK) இயக்குநர் ஜெனரல் டத்தோ ருஸ்லின் ஜூசோ வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு இச்சிறுவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு எதுவும் பதிவாகவில்லை (2024-இல் 3 வழக்குகள் இருந்தன).
அதேநேரம் 13 முதல் 18 வயது வரையான பதின்ம வயதினரின் எண்ணிக்கை 1,255-லிருந்து 1,213-ஆகக் குறைந்துள்ளது. 19 முதல் 39 வயது வரையான இளைஞர்களே அதிகபட்சமாக 112,632 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர், இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டு 116,254 பேராக இருந்தது.
இந்நிலையில் 40 முதல் 59 வயதுடையவர்களிடையே பாதிப்பு 72,590-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடையேயும் இந்த எண்ணிக்கை 5,397-ஆக அதிகரித்துள்ளது என்று அவர் சொன்னார்.
நேற்று இரவு சோகோ (Sogo) வளாகத்திற்கு அருகே நடைபெற்ற ‘போதைப்பொருள் இல்லா நாடாக உருவாக்க இலக்கு’ (Jelajah Aspirasi Bebas Dadah) விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டத்தோ ருஸ்லின் பேசியபோது, “சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை சற்றே குறைந்திருந்தாலும், நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்டதாகக் கருத முடியாது. போதைப்பொருள் ஒழிப்பு என்பது அரசு மற்றும் AADK-இன் பணி மட்டுமல்ல; பெற்றோர்களும் சமூகமும் இதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
தற்போது நாடு முழுவதும் SKUAD Antidadah, போதைப்பொருள் மறுவாழ்வுக் குழு (JKPD) மற்றும் தன்னார்வலர்கள் போதைப்பொருள் ஒழிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
The post மலேசியாவில் போதைப்பொருள் பயன்பாடு: சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 191,832-ஆகக் குறைவு! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

