கோலாலம்பூர்:
மலேசியாவில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2025 மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 7,862 வீடற்ற நபர்கள் சமூக நலத்துறையினால் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் முக்கியப் பெருநகரங்களிலேயே வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதாக பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார். அதில் கோலாலம்பூரில் அதிகபட்சமாக 1,742 பேரும், அடுத்து பினாங்கில் 1,288 பேரும் ஜோகூரில் 1,199 பேரும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகரில் மட்டும், மாநகராட்சி (DBKL) நடத்திய ஒரு குறிப்பிட்ட சோதனையில் சுமார் 400 பேர் வரை வீடற்றவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
வீடற்றவர்களின் நலனுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மேலும் விளக்குகையில்: கோலாலம்பூரில் உள்ள இடைக்காலத் தங்குமிடங்கள் (Transit Centres) மூலம் இதுவரை 4,886 பேர் பயனடைந்துள்ளனர். இங்கு அவர்களுக்கு உணவு, தங்குமிடம், சுகாதாரப் பரிசோதனை மற்றும் சமூக ஆலோசனை போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன.
பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் அவ்வப்போது நடத்தப்படும் திட்டமிட்ட சோதனைகள் மூலம் வீடற்றவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 2023 முதல் 2025 நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில், ஆதரவற்ற நிலையில் இருந்த 4,311 வெளிநாட்டினர் மீது 1977-ஆம் ஆண்டு ஆதரவற்றோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய வெளிநாட்டினர் குறித்த விவரங்கள் மேலதிக நடவடிக்கைக்காகக் குடிநுழைவுத் துறையிடம் (Immigration Department) ஒப்படைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடற்றவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், அவர்களுக்கு முறையான வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரவும் பல்வேறு அமலாக்க முகமைகளுடன் இணைந்து சமூக நலத்துறை தொடர்ந்து பணியாற்றி வருவதாக அமைச்சர் நான்சி சுக்ரி உறுதி அளித்தார்.




