கோலாலம்பூர்:
கூச்சிங் மற்றும் செரியான் ஆகிய பகுதிகளில் நிலவி வரும் மோசமான புகைமூட்டம் காரணமாக, எதிர்வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள மலேசிய தினக் கொண்டாட்டங்களின் திறந்தவெளி நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறாது என தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், இத்தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
திறந்தவெளி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட போதிலும், முக்கிய மலேசிய தினக் கொண்டாட்டம் செப்டம்பர் 16 அன்று இரவு கூச்சிங் போரினியோ மாநாட்டு மையத்தில் உள்ளரங்க நிகழ்வாகத் திட்டமிட்டபடி நடைபெறும்.
நிலமையைச் சமாளிக்க சரவாக்கில் தேவைப்பட்டால் ‘மேக விதைப்பு’ மூலம் செயற்கை மழை பொழிவிப்பதற்கான ஆயத்தங்களை இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு (NRES) செய்துள்ளது. எனினும், காற்றின் திசை மாறுபாட்டால் மேகங்கள் தென் சீனக் கடலை நோக்கி நகர்வதால், மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் (MetMalaysia) மதிப்பீட்டின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
கடந்த ஆகஸ்ட் 31 அன்று புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்திய குழுவினருக்கு அமைச்சரவை தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டது. இந்நிகழ்வில் 1,00,000க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
The post மலேசியாவில் அதிகரிக்கும் புகைமூட்டம்: செயற்கை மழை பொழிய திட்டம்; அமைச்சரவைக் கூட்டத்தில் ஃபஹ்மி ஃபட்ஸில் தகவல்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

