இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் பேரனும் வரலாற்றாசிரியருமான ராஜ்மோகன் காந்தியை அடுத்த ஆண்டு மலேசியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.தனது நீண்டகால நண்பர் என்று வர்ணித்த ராஜ்மோகனுடன், சமீபத்தில் தொலைபேசியில் பேசியதாக அன்வர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். 2012இல் மும்பையில் ராஜ்மோகன் ஏற்பாடு செய்திருந்த, ஆசியாவில் ஜனநாயகங்கள் குறித்த மாநாட்டில் நாங்கள் சந்தித்ததை நினைவு கூர்ந்தோம். அப்போது, கல்விசார் ஒத்துழைப்பு, அறிவுசார் பரிமாற்றங்கள் மற்றும் நாகரிக உரையாடல் ஆகியவற்றின் மூலம் மலேசியா-இந்தியா இடையேயான வரலாற்று மற்றும் நாகரிக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம்.
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், கல்வியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுக்கு ஜனநாயகம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் விழுமியங்கள் சார்ந்த தலைமைத்துவம் குறித்து விரிவுரையாற்றுவதற்காக மலேசியாவிற்கு வருகை தருமாறு அவரை நான் அழைத்துள்ளேன் என்று அவர் கூறினார். 90 வயதான ராஜ்மோகன், மகாத்மாவின் இளைய மகனான தேவதாஸ் மோகன்தாஸ் காந்தியின் மகன் ஆவார். ராஜ்மோகன் ஒரு வரலாற்றாசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார், அவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். அவர் 1990 முதல் 1992 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் சிறிது காலம் உறுப்பினராக இருந்தார்.



