கோலாலம்பூர்:
மலேசியாவின் 69-ஆவது சுதந்திர தினத்தை (தேசிய தினம்) முன்னிட்டு, சிங்கப்பூரின் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) ஜோகூர் கடற்பால எல்லையில் பணியாற்றும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகவை (AKPS) அதிகாரிகளுக்கு நேரில் கேக் வழங்கித் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.
உலகின் மிகப் பரபரப்பான நில எல்லையான சிங்கப்பூர்-மலேசியா கடற்பாலத்தை, கடந்த ஆகஸ்ட் 7 முதல் 10 வரை சிங்கப்பூர் தேசிய தின வாரயிறுதியில் சுமார் 2.1 மில்லியன் பயணிகள் கடந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடிநுழைவுச் செயல்பாடுகளைக் கடந்து இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவும் பல துறைகளில் கூட்டு ஒத்துழைப்பும் நிலவுகின்றன. அண்மையில் மலேசியாவின் பகாங் மற்றும் திராங்கானு மாநிலங்களுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ சியன் லூங், “சிங்கப்பூரும் மலேசியாவும் என்றென்றும் அண்டை நாடுகள்; என்றென்றும் ஒன்றிணைந்து செயலாற்றும் நண்பர்கள்” என இருநாட்டு உறவை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதற்கேற்ப, எல்லையில் இரு நாட்டு அதிகாரிகளும் பரஸ்பரம் சுமுகமான உறவை வெளிப்படுத்தும் வகையில் இந்த வாழ்த்துப் பரிமாற்றம் அமைந்துள்ளது.
மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் குடிநுழைவுத் துறை அதிகாரிகளும் தங்களது தேசிய தினங்களின் போது, எல்லையைக் கடந்து சென்று மறுபக்க அதிகாரிகளுக்குக் கேக் வழங்கி வாழ்த்துவது கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் ஒரு நல்லெண்ணப் பாரம்பரிய வழக்கமாகப் பின்பற்றி வரப்படுவது குறிப்பிடத்தக்கது.



