Last Updated : 11 Jun, 2024 09:36 AM
Published : 11 Jun 2024 09:36 AM
Last Updated : 11 Jun 2024 09:36 AM

லிலொங்வே: கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா பயணித்த ராணுவ விமானம் மாயமாகியுள்ளது. அவருடன் மேலும் 9 பேர் விமானத்தில் பயணித்தனர். தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.
இந்த விமானம் திங்கள்கிழமை (ஜூன் 10) அன்று 51 வயதான துணை அதிபர் சவ்லோஸ் சிலிமாவுடன் தலைநகர் லிலொங்வேயில் இருந்து புறப்பட்டது. அந்த விமானம் சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மசுஸு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. விமானம் லிலொங்வேயில் இருந்து 45 நிமிடங்களில் அந்த இடத்தை அடைய வேண்டிய நிலையில், அது மாயமாகியுள்ளது.
விமானத்துடனான தொடர்பினை விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் இழந்துள்ளனர். இதையடுத்து மலாவி நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா தேடுதல் பணியை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ரேடாருக்கு வெளியில் சென்ற விமானத்துடனான தொடர்பை பெற அணைத்து வகையிலும் முயற்சித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
FOLLOW US
தவறவிடாதீர்!


