(ரெ.மாலினி)
மலாக்கா:
மலாக்கா ராயாவில் உள்ள இரண்டு தனித்தனி வளாகங்களில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் சீன நாட்டைச் சேர்ந்த மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சீன பிரஜைகளைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இணைய வேலைவாய்ப்பு மோசடி கும்பலின் தந்திரம் அம்பலமாகியுள்ளது.
29 முதல் 37 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் மலாக்கா மாநில காவல்துறை தலைமையகத்தின் வணிக குற்றப்புலனாய்வுத் துறை மற்றும் மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறையின் வணிக குற்றப்புலனாய்வுப் பிரிவு இணைந்து நேற்று நண்பகல் 12 மணியளவில் கைது செய்தனர்.
மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் சூப்பரிண்டெண்ட் அஸ்ருல் முகமட் கூறுகையில், இல்லாத இணைய வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி மோசடி செய்யும் கும்பல் தொடர்பான தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இரண்டு வளாகங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில், மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், ஒரு மடிக்கணினி, பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 23 கைபேசிகள், ஒரு ரௌட்டர், இரண்டு குறிப்பேடுகள், இரண்டு மர அலமாரிகள் ஆகியவை அடங்கும்.
பொருட்களை ஆய்வு செய்ததுடன், சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், டிக் டோக் மூலம் சீன பிரஜைகளை குறிவைத்து போலியான இணைய வேலைவாய்ப்புகளை வழங்கி மோசடி செய்ததில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக அஸ்ருல் தெரிவித்தார்.
இந்தக் கும்பல் கடந்த மாத தொடக்கத்தில் மலாக்காவில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியதாகவும், சந்தேக நபர்கள் அனைவரும் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் போன்று செயல்பட்டு டிக் டோக் மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தேடியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், எளிய பணிகளைச் செய்தாலே அதிகளவு கமிஷன் அல்லது லாபம் கிடைக்கும் எனக் கூறி இணைய வேலைவாய்ப்புகளை அவர்கள் வழங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களிடம் விளம்பரங்களுக்கு ” லைக் செய்வது, டிக் டோக் செயலியில் Aether Swap உள்ளிட்ட இணைய விளையாட்டுகளை விளையாடுவது போன்ற பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் லாபம் கிடைக்கும் என சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவர்களை நம்ப வைத்துள்ளனர்.
வேலை செய்ய ஆர்வம் காட்டும் நபர்களை கும்பல் அடையாளம் கண்ட பின்னர், அவர்களுடனான தொடர்பை அதே மோசடி வலையமைப்பில் உள்ள மற்றொரு நபர் எடுத்துக்கொள்வார்.
அதன்பின், அந்த நபர் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி, இறுதியில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் அளவுக்கு அவர்களைத் தூண்டியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் மாதம் சுமார் 3,000 சம்பளம், WeChat Wallet மூலம் பெற்றதாக நம்பப்படுகிறது.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 420 மற்றும் 1959/63 குடிவரவு சட்டம் பிரிவு 6(1)(சி) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது. மேலும் விசாரணைக்கு உதவுவதற்காக மூன்று சந்தேக நபர்களும் இன்று முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.



