கொழும்பு, டேம் வீதி (Dam Street) 100 அடி வீதியில் உள்ள பொது மலசலகூடத்திற்கு அருகில், ஒரு சிறுமி மற்றும் சிறுவனை கைவிட்டுச்சென்றுள்ள நிலையில், டேம் வீதி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் திங்கட்கிழமை (20) காலை மீட்கப்பட்டுள்ளனர்.
10 வயதுடைய சிறுமியொருவர் மற்றும் 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
டேம் வீதி 100 அடி வீதி பொது மலசலகூடத்திற்கு அருகில் இரு பிள்ளைகள் அநாதரவாக இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், டேம் வீதி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் குமாரி உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று இந்த பிள்ளைகளை பொலிஸ் பாதுகாப்பிற்கு எடுத்துள்ளனர்.
குறித்த சிறுமியின் தாய் அவரை விட்டு சென்றுள்ளதுடன், தந்தை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குறித்த சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். சிறுவனின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையான காரணத்தினால் விளக்கமறியலில் உள்ளதாக குறித்த சிறுவன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
பெற்றோர்கள் இல்லாத நிலையில் தங்களைப் பராமரித்து வந்த உறவினப் பெண், தான் வெளிநாட்டு வேலைக்கு செல்வதாக கூறி, ஞாயிற்றுக்கிழமை (19) அன்று முச்சக்கர வண்டியில் தங்களை ஏற்றி வந்து விட்டுச் சென்றதாக பிள்ளைகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிள்ளைகளின் உறவினர்களைக் கண்டறிய பொலிஸார் கடும் முயற்சி எடுத்த போதிலும், இதுவரை அவர்களைக் கண்டறிய முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவின் அறிவுறுத்தலின் பேரில், கொழும்பு திசாவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சாவின் வழிகாட்டலில், டேம் வீதி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் குழுவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

