கட்டுப்படுத்தப்பட்ட பொருள் அடங்கிய மருந்துப் பொருளை 2024-ஆம் ஆண்டில் விற்பனை செய்ததற்காக, கோத்தா கினாபாலு அமர்வு நீதிமன்றம் இன்று கடை மேலாளர் ஒருவருக்கு 3,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.
34 வயதான ஹுய் ஜுன் செங், நீதிபதி சைனி பிஷிர் முன்னிலையில் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
இந்தக் குற்றம் பிப்ரவரி 14, 2024 அன்று கோத்தா கினாபாலு, ஜாலான் பாந்தாயில் உள்ள பப்ளிக் கெமிஸ்ட் (சபா) சென்டிரியான் பெர்ஹாட்டில் நடைபெற்றது. அங்கு ஹுய், பதிவுசெய்யப்பட்ட மருத்துவ அதிகாரியின் மருந்துச் சீட்டு இல்லாமல் அந்தப் பொருளை விற்பனை செய்துள்ளார்.
ஹுய் “Hovasc 10mg” என அடையாளமிடப்பட்ட ஒரு பெட்டியை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. அதில் 10 வெள்ளை நிற மாத்திரைகள் இருந்தன. அந்த மாத்திரைகளில் ‘அம்லோடிபைன்’ இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது 1952-ஆம் ஆண்டு நச்சுப் பொருட்கள் சட்டத்தின் முதல் அட்டவணையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு நச்சுப் பொருளாகும்.
இந்த மருந்து பொதுவாக உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்படுவதாகும்.
பதிவுசெய்யப்பட்ட மருத்துவ அதிகாரியின் மருந்துச் சீட்டு இல்லாமல், கட்டுப்படுத்தப்பட்ட மருந்தை விற்றதற்காக, நச்சுப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 21(1)(c)-ன் கீழ் ஹுய் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றத்திற்கு 3,000 ரிங்கிட் வரை அபராதம், ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
-fmt
