புதுடெல்லி: மத்திய பிரதேசத்தின் திகம்கர் மாவட்டம், சிப்ரி கிராமத்தை சேர்ந்தவர் ரவிசங்கர். ஒன்பது வயதில் வீட்டில் இருந்து வெளியேறிய அவர், மத்திய பிரதேசத்தின் பிண்டு மாவட்டம், ராவத்புராவில் உள்ள அனுமன் கோயிலில் தங்கி ஆன்மிக பிரச்சாரம் செய்தார்.
பின்னர் ராவத்புரா கிராமத்தில் 62 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட சிவன் கோயிலை கட்டினார். தற்போது அவர் ராவத்புரா சிவன் கோயிலின் மடாதிபதியாக உள்ளார். மேலும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் மருத்துவம், பொறியியல், நர்சிங், பார்மசி, ஐடிஐ கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் ரவி சங்கரின் அறக்கட்டளை சார்பில் மருத்துவக் கல்லூரி நடத்தப்படுகிறது. இந்த கல்லூரியில் அண்மையில் மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கு சாதகமாக அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர். இதற்காக என்எம்சி அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 மாநிலங்களை சேர்ந்த 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இதன்அடிப்படையில் மடாதிபதி ரவிசங்கர், முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி சஞ்சய் சுக்லா, என்எம்சி மூத்த அதிகாரிகள் உட்பட 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி), மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பித்து அனுமதி வழங்குகிறது. இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆய்வுக்கு செல்லும் என்எம்சி அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க தலா ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது.
மடாதிபதி ரவிசங்கரின் அறக்கட்டளை சார்பில் ராய்ப்பூரில் நடத்தப்படும் மருத்துவமனையின் அங்கீகாரத்தை புதுப்பிக்க என்எம்சி அதிகாரிகளுக்கு ரூ.56 லட்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. தெலங்கானாவின் வாரங்கல்லில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்துக்காக ரூ.4 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல நாடு முழுவதும் 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்துக்காக பல்வேறு மோசடிகள் நடைபெற்று உள்ளன. இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.