Last Updated:
ஆந்திராவில் மனைவி தூக்குப் போட்டு உயிரிழப்பதை வீடியோ எடுத்த கணவன், நக்கலும் செய்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடந்தது என்ன?
ஆந்திர மாநிலம் கடப்பாவில் மனைவி தூக்குப் போட்டு உயிரிழப்பதை ஜன்னல் வழியாக வீடியோ எடுத்து இருக்கிறார் கணவன். தூக்குக் கயிறை அப்படிப் போடக்கூடாது… இப்படிப் போடு…. என்று தற்கொலை செய்த மனைவியிடம் நக்கலும் செய்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடந்தது என்ன?
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட் மண்டலம் பொய்னபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ் என்பவர் ரயில்வேயில் லோகோ பைலட்டாகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு நந்தலூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணியுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
கடந்த சில காலமாக இந்தத் தம்பதியரிடையே குடும்ப சண்டைகள், தகராறுகள் அடிக்கடி நடந்து வந்தன. வியாழக்கிழமை தம்பதியரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணவேணி (29) கணவனை வெளியே தள்ளி, அறையை தாளிட்டு, வீட்டிலேயே ஃபேனில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஆனால், அங்கேயே இருந்த கணவர் ஸ்ரீனிவாஸ் அவரைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும், ஜன்னல் வழியாக மனைவி தூக்குப் போடும் காட்சியை தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார்.
அத்தோடு நிற்காமல், சிரித்தபடியே, உனக்கு தூக்குப் போட்டு சாகக் கூட தெரியல. முடிச்சு இப்படிப் போடக்கூடாது, அப்படிப் போட்டால் சாக மாட்ட. இப்படித்தான் போடணும் என்று தூக்குப் போட்டு இறப்பதற்கான வழிமுறைகளை நக்கலாகக் கூறியிருக்கிறார். அந்தப் பாசக்காரக் கணவன் காட்டிய வழிமுறை அடிப்படையில் தூக்குப் போட்டுக் கொண்ட மனைவி கிருஷ்ணவேணி ஓரிரு நிமிடங்களில் துடிதுடித்து இறந்துவிட்டார். இதை அப்படியே ஜன்னல் வழியாக வீடியோ எடுத்து ரசித்திருக்கிறார் கணவர் ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ். தற்போது அந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் சூறாவளியாகப் பரவி வருகிறது.
கிருஷ்ணவேணி இறந்த செய்தி அறிந்து அங்கே குவிந்திருந்த உறவினர்களும் அந்த வீடியோவைப் பார்க்கக் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். கண் முன்னே மனைவி உயிரிழக்கும்போது தடுக்காமல் வீடியோ எடுத்த ஸ்ரீனிவாஸ் மீது அவர்கள் கடும் கோபமடைந்து அவரைத் தாக்க முயன்றனர்.


