
Last Updated:
மாதவியின் பெற்றோர் போன் செய்த போது அவர் பதில் அளிக்காததால், சந்தேகமடைந்த அவர்கள் மகளை காணவில்லை என மீர்பேட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
தெலங்கானாவில் மனைவியை கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி குக்கரில் வேகவைத்த கணவன், எலும்புகளை கால்வாயில் வீசிய கொடூர சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி. இவர் வெங்கட மாதவி என்பவரை திருமணம் செய்து 13 ஆண்டுகளாக தெலங்கானாவின் மேட்சலில் வசித்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த குருமூர்த்தி, அவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். சங்கராந்தி பண்டிகையை ஒட்டி குழந்தைகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய குருமூர்த்தி, கடந்த 16 ஆம் தேதி மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். மாதவியின் பெற்றோர் போன் செய்த போது அவர் பதில் அளிக்காததால், சந்தேகமடைந்த அவர்கள் மகளை காணவில்லை என மீர்பேட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக குருமூர்த்தியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவந்தன. விசாரணையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக சொன்ன குருமூர்த்தி, உடலை வெட்டி துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்ததாகவும் சொன்னார். பின்னர் யூடியூப் மற்றும் ஆங்கில படங்களை பார்த்து எலும்புகளை கரைப்பது எப்படி என கற்றதாகவும், சோதனை முயற்சியாக தெரு நாய் ஒன்றை கொன்று குக்கரில் வேகவைத்து, வெயிலில் காயவைத்து பொடிப்பொடியாக்கி கால்வாயில் கரைத்ததாகவும் கூறினார்.
அதே பாணியில் தனது மனைவியின் உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்து பொடிப்பொடியாக்கி, கால்வாயில் கரைத்ததோடு, மீதம் உள்ள எலும்புகளை ஏரியில் வீசியதாக சொல்லப்பட்டது. குருமூர்த்தி வாக்குமூலம் அளித்தாலும், இந்த வழக்கில் தெலங்கானா காவல்துறை சிக்கல்களை எதிர்கொண்டு வருவது தெரியவந்துள்ளது. அதாவது, குருமூர்த்தி அளித்த வாக்குமூலத்தின்படி, கால்வாயில் வீசப்பட்ட அவரது மனைவியின் உடல்பாகங்களை கண்டுபிடிக்க முடியவில்லையாம். மேலும், வீட்டில் அவர் மனைவியை கொன்றதற்கான தடயங்களும் சிக்கவில்லை என்றும் தெலங்கானா காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
அந்த அதிகாரி மேலும் கூறுகையில், “வீட்டில் ரத்தம் தெரியக்கூடாது என்பதற்காக குருமூர்த்தி, ரசாயனம் மூலம் வீட்டை கழுவியிருக்கிறார்” என்றும், “இதனால் தடயங்களை சேகரிப்பதில் சிக்கல் நிலவிவருகிறது” என்றும் கூறினார். இந்த சிக்கலை தீர்க்க, இதேபோன்ற கொலை வழக்குகளை கையாண்ட வேறு மாநில தடய அறிவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு குருமூர்த்தி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில், தற்போது ரத்த மாதிரிகள், தலைமுடி ஆகியவை கையகப்படுத்தப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஹீட்டரில் இருந்து தலைமுடி கைப்பற்றப்பட்டதை அடுத்து, அது தொடர்பாக குருமூர்த்தியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அதில், மனைவியை கொன்று உடல்பாகங்களை துண்டுகளாக வெட்டிய பின் அதில், சில உடல்பாகங்களை ஹீட்டர் உதவியுடன் வாளியில் தண்ணீரை சூடாக்கி அதில் வேகவைத்ததாகவும், பின்னர் மீண்டும் குக்கரில் வேகவைத்தது, அதன்பின்னர் அதை குளத்தில் வீசியதாகவும் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். “வீட்டில் துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக சில ரசாயனங்களை தெளித்ததாகவும், 12 மணிநேரத்தில் உடலை அப்புறப்படுத்தியதாகவும்” தெரிவித்துள்ளார். இந்த கொலை சம்பவத்தில், தினம் தினம் இப்படி வெளிவரும் தகவல் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
January 27, 2025 10:37 AM IST

