சட்டீஸ்கர் மாநிலம், கொரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஜிதேந்திர காசியா என்பவருக்கும், தாரா என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 4 குழந்தைகள் உள்ளனர். கணவனின் வரதட்சணைக் கொடுமை மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக, தாரா கடந்த சில ஆண்டுகளாகத் தன் கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், தாராவின் நடத்தையில் சந்தேகமடைந்த ஜிதேந்திர காசியா, கடந்த 14-ஆம் திகதி தாரா தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தாராவின் கை, கால்களைக் கட்டிப்போட்டுக் கொடூரமாகத் தாக்கியதோடு, கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். அத்துடன் நிற்காமல், தாராவின் தலைமுடியை வெட்டி மொட்டையடித்த கணவன், அவரது முகத்தில் கரிக்கட்டை மற்றும் என்ஜின் ஆயிலை பூசி அவமானப்படுத்தியுள்ளார். மேலும், தங்களின் குழந்தைகளையே வைத்தே தாராவைக் கன்னத்தில் அறையச் செய்ததோடு, கட்டாயப்படுத்தித் தனது சிறுநீரையும் குடிக்க வைத்துள்ளார்.
இக்கொடூரம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, போலீசார் விசாரணையில் இறங்கினர். இதுகுறித்து ஜிதேந்திர காசியா மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் 85, 115(2), 296 மற்றும் 351(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தாரா கூறுகையில், “அவர் ஆரம்பத்தில் இருந்தே என் மீது சந்தேகப்பட்டுத் தாக்கி வந்தார். நான் கருத்தடை சிகிச்சை செய்துகொண்ட பிறகும் இந்தச் சித்திரவதை தொடர்ந்தது; எனக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று கதறினார்.
இதுதொடர்பாகக் கூடுதல் எஸ்பி சுரேஷா சவுபே கூறுகையில், “வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளி மீது கூடுதல் சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.


