கோலாலம்பூர்:
மத்திய கிழக்கில் மோதல்கள் நிலவும் பகுதிகளில் உள்ள மலேசிய மாணவர்கள் மற்றும் குடிமக்கள், தங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய உடனடியாக அந்தந்த நாடுகளில் உள்ள மலேசியத் தூதரகங்களில் தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு உயர்கல்வி துணை அமைச்சர் ஆடம் அட்லி அப்துல் ஹலீம் அறிவுறுத்தியுள்ளார்.
ஈப்போவில் உள்ள போலிடெக்னிக் உங்க்கு ஒமார் (Politeknik Ungku Omar) கல்வி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளில் நிலவும் மோதல்களைக் கையாள மலேசியத் தூதரகங்கள் ஏற்கனவே அவசரகாலத் திட்டங்களை (Emergency plans) தயார் நிலையில் வைத்துள்ளன என்றும், அங்குள்ள மாணவர்கள் மற்றும் மலேசியர்கள் தூதரகங்கள் வழங்கும் அனைத்துப் பாதுகாப்பு நெறிமுறைகளையும், வெளியேற்றத் திட்டங்களையும் (Evacuation procedures) கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.
தற்போதைய வான்வெளி மூடல்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ரத்துகளால் சில சிரமங்கள் இருக்கலாம், இருப்பினும் மலேசியர்களின் பாதுகாப்புதான் அரசின் முதல் முன்னுரிமை என்று அவர் கூறினார்.
மத்திய கிழக்கில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், சமீபத்திய தகவல்களைப் பெற வெளியுறவு அமைச்சு (Wisma Putra) அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
உயர்கல்வி அமைச்சகத்தின் தரவுகளின்படி, மோதல் பகுதிகளுக்கு அருகே உள்ள 6 நாடுகளில் மொத்தம் 1,936 மலேசிய மாணவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.




