International
oi-Nantha Kumar R
டெஹ்ரான்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் வெடித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா இன்று 2வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் அண்டை நாடுகளான பஹ்ரைன் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டி ஈரான் மீது அமெரிக்கா இன்று 2வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும், அமெரிக்காவும் அண்டை நாடுகளாக இல்லை. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஈரானை சுற்றியுள்ள நாடுகளின் ராணுவ நிலைகளை பயன்படுத்தி அமெரிக்கா, ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் ஆக்ரோஷமான ஈரான், அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. அதன்படி ஈரானின் அண்டை நாடுகளாக உள்ள குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ராணுவப்படை தளங்களை குறிவைத்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பஹ்ரைன் நாட்டை எடுத்து கொண்டால் அங்கு அமெரிக்காவின் முக்கிய கடற்படை தளம் உள்ளது. அமெரிக்க கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவின் தலைமையிடமாகவும், கட்டுப்பாட்டு மையமாகவும் செயல்பட்டு வருகிறது. புரியும்படி கூற வேண்டும் என்றால் இந்த கடற்படை தளத்தில் இருந்து தான் மத்திய கிழக்கு பிராந்திய பகுதிகளில் அமெரிக்கா தனது கடற்படை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் தான் இந்த இடத்தை குறிவைத்து ஈரான் அடித்துள்ளது.
அதேபோல் குவைத் நாட்டை எடுத்து கொண்டால் அங்கு அமெரிக்காவிற்கு சொந்தமான பல்வேறு ராணுவ தளங்கள் அமைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் (CENTCOM) குவைத்தில் தான் உள்ளது. இது அமெரிக்க ராணுவத்திற்கான தளவாட போக்குவரத்து மையமாகவும், தளமாகவும் உள்ளது. அதேபோல் குவைத் நாட்டிற்கு உட்பட்ட ஈராக் எல்லை பகுதியில் அமெரிக்காவிற்கு சொந்தமான அலி அல் சலீம் விமானப்படை தளம், புஹ்ரிங் எனும் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. மேலும் குவைத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள அந்த நாட்டின் கடற்படை தளத்தையும் அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இதனால் தான் அமெரிக்காவை பழிவாங்கும் வகையில் பஹ்ரைன் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளின் ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல்களை தொடங்கி உள்ளது.
இதனால் தான் இந்த 2 நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு நேற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் நேற்று பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் கடற்படை தளம் மீது தாக்குதல் நடத்தியது. இன்று கூடுதலாக குவைத் நாட்டில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் அடிக்கிறது. இதனால் மீண்டும் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் இன்னும் விரிவடைந்து மத்திய கிழக்கு பிராந்திய போராக மீண்டும் மாறிவிடுமோ என்று மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

