Last Updated:
மத்திய இணை அமைச்சர் ரக்ஷா கட்சேவின் மகளுக்கு மகாராஷ்டிராவில் சீண்டல். கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உறுதி.
மத்திய இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் ரக்ஷா கட்சேவின் மகளுக்கு மகாராஷ்டிராவில் சீண்டல் நடைபெற்றுள்ளது. மத்திய இணை அமைச்சரின் மகளுக்கே சீண்டல் நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கான் மாவட்டம், முக்தைநகரில் ‘சாந்த் முக்தை யாத்திரை’ நடந்தது. இந்த யாத்திரையில் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரக்ஷா கட்சேவின் மகள் பங்கேற்றுள்ளார். அப்போது அங்கு இருந்த சில இளைஞர்கள் அவரிடம் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் அறிந்ததும், மத்திய இணை அமைச்சர் ரக்ஷா கட்சே முக்தை நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் ரக்ஷா கட்சே, “நேற்று முன்தினம் இரவு, எனது மகள் கண்காட்சிக்கு சென்றபோது, இந்த சம்பவம் நடந்தது. சில சிறுவர்கள் அவளைத் துன்புறுத்தினர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : ஹரியானாவில் காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை: சூட்கேஸில் உடல் கண்டெடுப்பு
இது குறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “இது மலிவான செயல்; போலீசார் வழக்கு பதிவு செய்து, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வகையான தொல்லை தவறானது; அவர்களை மன்னிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய முக்தை நகர் துணைப்பிரிவு காவல் அதிகாரி கிருஷ்ணாத் பிங்கலே, “கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி முக்தை நகர் தாலுகாவிற்கு உட்பட்ட கோத்தளி கிராமத்தில் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முக்தைநகர் நகரைச் சேர்ந்த அனிகேத் குய் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் கலந்து கொண்டனர். இந்த யாத்திரை நிகழ்ச்சியில் இவர்கள், மூன்று இல் இருந்து நான்கு சிறுமிகளிடம் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த நபர்கள் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
அதேபோல், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரிவின் மாநிலத் தலைவர் ரோகிணி காட்சே, “மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சரின் மகளுக்கு இப்படியான சம்பவம் நடந்துள்ளது என்றால், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எப்படி நீதி கிடைக்கும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
March 02, 2025 6:46 PM IST


