மகாசிவராத்திரியை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கான் மாவட்டம், முக்தைநகரில் ‘சாந்த் முக்தை யாத்திரை’ நடந்தது. இந்த யாத்திரையில் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரக்ஷா கட்சேவின் மகள் மற்றும் அவரது தோழிகள் பங்கேற்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த சில இளைஞர்கள் அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் அறிந்ததும், மத்திய இணை அமைச்சர் ரக்ஷா கட்சே முக்தை நகர் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
இது குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் ரக்ஷா கட்சே, “எனது மகள் மகாசிவராத்திரி கண்காட்சிக்கு சென்றபோது, இந்த சம்பவம் நடந்தது. சில சிறுவர்கள் அவளைத் துன்புறுத்தினர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : கர்நாடகா முதல்வராகிறார் டி.கே. சிவக்குமார்? அமைச்சரின் பேச்சால் பரபரப்பு.. மல்லிகார்ஜுன கார்கே மகன் கொடுத்த பதில்
இது குறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “இது மலிவான செயல்; போலீசார் வழக்கு பதிவு செய்து, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வகையான தொல்லை தவறானது; அவர்களை மன்னிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய முக்தை நகர் துணைப்பிரிவு காவல் அதிகாரி கிருஷ்ணாத் பிங்கலே, “கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி முக்தை நகர் தாலுகாவிற்கு உட்பட்ட கோத்தளி கிராமத்தில் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முக்தைநகர் நகரைச் சேர்ந்த அனிகேத் குய் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் கலந்து கொண்டனர். இந்த யாத்திரை நிகழ்ச்சியில் இவர்கள், மூன்று இல் இருந்து நான்கு சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த நபர்கள் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
அதேபோல், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரிவின் மாநிலத் தலைவர் ரோகிணி காட்சே, “மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சரின் மகளுக்கு இப்படியான சம்பவம் நடந்துள்ளது என்றால், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எப்படி நீதி கிடைக்கும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
புகார் அளித்துவிட்டு திரும்பிய மத்திய இணை அமைச்சர் ரக்ஷா கட்சே, “நான் இன்று ஒரு தாயாக காவல் நிலையத்திற்கு சென்றேன். மத்திய அமைச்சராக இல்லை. அன்று இரவு எனது மகள் மற்றும் அவரது தோழிகளுக்கு நடந்த சம்பவம் கண்டனத்திற்குரியது. பல தாய்மார்கள் இதுபோன்ற பிரச்சினையால் அவதியுற்றிருக்கலாம். அவர்கள் எல்லாம் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் மத்திய இணை அமைச்சர் ரக்ஷா கட்சே மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பெறப்பட்ட புகாரில் 3 சிறுவர்கள் உட்பட நான்கு பேரை கைது செய்திருப்பதாக முக்தை நகர் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மூன்று பேரை வலைவீசி தேடிவருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 03, 2025 4:13 PM IST
மத்திய இணை அமைச்சரின் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மகாராஷ்டிரா காவல்துறை

