Last Updated:
மத்திய இணையமைச்சரின் மகன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய இணையமைச்சரின் மகன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை மே 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநில பாஜக முன்னாள் தலைவர் பண்டி சஞ்சய் குமார் தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கிறார். இவரது மகனான பந்தி பாகீரத், 17 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்படி கடந்த 8ஆம் தேதி பண்டி பாகீரத்துக்கு எதிராக போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் இது தொடர்பாக பண்டி தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை தெலங்கானா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து, அந்தச் சிறுமியும் அவரது குடும்பத்தினரும் தன்னிடம் நெருக்கம் காட்டியதாகவும், பின்னர் அச்சிறுமியை திருமணம் செய்துக்கொள்ள தன்னை வற்புறுத்தியதாகவும் பண்டி பாகீரத் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஐதராபாத் அருகே பண்டி பகீரத்தை காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பண்டி சஞ்சய் குமார், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், தன் மகன் குற்றம் இழைக்கவில்லை என்பதை சட்டப்படி நிரூபிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
Hyderabad,Hyderabad,Telangana


