Last Updated:
இந்த அதிரடி அறிவிப்பானது 8-வது ஊதியக் குழுவின் (8th Pay Commission) இரண்டு நாள் கூட்டம் நேற்று லக்னோவில் முடிவடைந்த சமயத்தில் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) முழுமையாக மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்க முன்வந்துள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DoPPW) கடந்த ஜூன் 22, 2026 அன்று இதற்கான முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கருணை அடிப்படையில் (Compassionate Grounds) வேலை வாய்ப்பு பெற்ற ஒரு சில குறிப்பிட்ட ஊழியர்கள் இப்போது தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) இருந்து மாற்றப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அமலில் இருந்த விதிகளின்படி, ஜனவரி 1, 2004-க்கு முன்னதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பழைய ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய உத்தரவின்படி தகுதியைத் தீர்மானிக்க ‘பணியில் சேர்ந்த தேதி’ கணக்கில் கொள்ளப்படாது. அதற்குப் பதிலாக ‘வேலைக்காக விண்ணப்பித்த தேதி’ முக்கிய அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும்.
ஒரு அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்துவிட்டாலோ அல்லது மருத்துவக் காரணங்களால் ஓய்வு பெற்றாலோ, அவரது குடும்ப உறுப்பினர் கருணை அடிப்படையில் வேலை பெற விண்ணப்பிக்கலாம். அவ்வாறு டிசம்பர் 31, 2003 அல்லது அதற்கு முன்னதாக கருணைப்பணிக்கு விண்ணப்பித்து தகுதி பெற்றிருந்த ஊழியர்களுக்கு, இப்போது மத்திய அரசு ஊழியர் (ஓய்வூதியம்) விதிகளின் கீழ் பழைய ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கும்.
2004-ல் NPS திட்டம் வருவதற்கு முன்பே விண்ணப்பித்தும், அரசின் நிர்வாகத் தாமதங்கள் காரணமாக ஜனவரி 1, 2004-க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற ஆயிரக்கணக்கான ஊழியர் குடும்பங்களுக்கு இந்த முடிவு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
இந்த அதிரடி அறிவிப்பானது 8-வது ஊதியக் குழுவின் (8th Pay Commission) இரண்டு நாள் கூட்டம் நேற்று லக்னோவில் முடிவடைந்த சமயத்தில் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் ரயில்வே, பாதுகாப்பு, சுகாதாரம், வருவாய் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளின் ஊழியர் சங்கங்கள் தங்களின் கோரிக்கைகளை ஊதியக் குழுவின் முன் சமர்ப்பித்துள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: குறிப்பிட்ட பிரிவு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க அரசு ஒப்புதல்..


