Last Updated:
பொங்கலுக்குப் பின் பாஜக மத்திய அமைச்சரவை மாற்றம், அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா, பூனம் மகாஜன், பன்சூரி சுவராஜ் உள்ளிட்டவர்கள் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு என சொல்லப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யவும், புதிய முகங்கள் மற்றும் இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் இளம் தலைவர்களுக்கு இம்முறை மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா, பூனம் மகாஜன், பன்சூரி சுவராஜ் உள்ளிட்டோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், வரும் ஏப்ரல் மாதத்தில் 37 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன. இதில் 9 இடங்கள் பாஜக வசம் உள்ளன. தமிழ்நாடு, பிகார், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து இளம் தலைமுறையினரை கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி அமைச்சரவையில் இருப்போரின் சராசரி வயது கடந்த 2014 ஆம் ஆண்டு 62 வயதாக இருந்தது. அது, கடந்த 2024 ஆம் ஆண்டு 58 வயதாக குறைந்து உள்ள நிலையில், மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பிற்குப் பிறகு மேலும் குறையும் என்று சொல்லப்படுகிறது.
மற்றொருபுறம், அடுத்த மாதம் பாஜகவின் தேசிய கருத்தரங்கு நடைபெற உள்ளது. அதில், தற்போதைய செயல்தலைவர் நிதின் நபின், பாஜகவின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், பல மூத்த பொதுச் செயலாளர்கள் மற்றும் செயலாளர்கள் மாற்றப்பட்டு இளைய தலைவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


