கோலாலம்பூர் :
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையிலும், மலேசிய மக்களுக்கு ஒரு நிம்மதி செய்தியைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கியுள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் கடல்வழிப் போக்குவரத்துப் பாதிப்புகளால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இருப்பினும், RON95 பெட்ரோல் -ஒரு லிட்டர் RM1.99 என்ற விலையிலேயே இன்னும் 2 மாதங்களுக்குத் தக்கவைக்கப்படும் எனப் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மலேசிய மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடல்வழியில் முக்கியமான ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சவால்களையும் பிரதமர் விளக்கினார்: சுமார் 200-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் அந்தப் பகுதியில் சிக்கியுள்ளன.
கப்பல்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும். இது உணவுப் பொருட்கள் மற்றும் இறக்குமதிப் பொருட்களின் விலை உயரக் காரணமாகலாம் என்றார்.
இந்த இக்கட்டான சூழலை உணர்ந்து பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) தங்களின் செலவினங்களைக் கவனமாகக் கையாளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




