
காலையில் புதுச்சேரியில் ₹2,700 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர், மதியம் 2.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் களம் மதுரையில் இன்று சூடுபிடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுராந்தகத்தில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (மார்ச் 1, 2026) மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் கூட்டணி பலம் நிரூபிக்கப்பட உள்ளது. இதில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆகியோருடன் கூட்டணி கட்சித் தலைவர்களான டி.டி.வி.தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பாதுகாப்பு கருதி 20-க்கும் மேற்பட்ட மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக காலையில் புதுச்சேரியில் ₹2,700 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர், மதியம் 2.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். தொடர்ந்து மாலையில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பின், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

