Last Updated:
மொராதாபாத் உம்ரி சப்ஜிபூரில் முகமது அர்மான் மற்றும் காஜல் சைனி காதல் திருமணத்துக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் காதல் ஜோடி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டம் உம்ரி சப்ஜிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அர்மான். 27 வயதான இவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியவர் மீண்டும் வெளிநாடு செல்லாமல் இருந்துள்ளார். இந்த கால கட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த காஜல் சைனி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிலும், காஜலுடன் பிறந்த சகோதரர்கள், தனது தங்கை உடனான காதலை கைவிடும்படி பலமுறை முகமது அர்மானை எச்சரித்துள்ளனர். அதை பொருட்படுத்தாத அர்மானும், காஜலும் காதல் திருமணம் செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக தனது மகனை காணவில்லை என்று அர்மானின் தந்தை ஹனீஃப் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் காஜலின் சகோதரர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி ஊரையே கதிகலங்க வைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அர்மான் தனது காதலி காஜலை பார்க்க சென்றுள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து காஜலின் சகோதரர்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர்.
உடனே இருவரையும் கட்டிவைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அப்படியும் ஆத்திரம் தீராமல் இருவரையும் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொலை செய்த பின்னர், இருவரின் உடலையம் குழி தோண்டி புதைத்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காஜலின் சசோதரர்கள் மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், ரிங்கு மற்றும் சதீஷ் ஆகிய இருவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உம்ரி சப்ஜிபூர் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த காதல் ஜோடியை, பெண்ணின் சகோதரர்கள் கொடூரமாக கொலை செய்து, உடல்களை குழிதோண்டி புதைத்த சம்பவம் உத்தர பிரதேசத்தையே உலுக்கியுள்ளது.
மதம் தாண்டி திருமணம் செய்ய முயற்சி.. இளம் காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்.. குலைநடுங்க வைக்கும் சம்பவம்!


