மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி முதற்கட்டத் தேர்தல் வரும் 23ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் வரும் 29ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து மேற்குவங்கத்தில் பிரச்சாரங்கள் அணல் பறக்கத் தொடங்கியுள்ளன. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி என நான்கு முனை போட்டி நிலவினாலும், நேரடியாக திரிணாமூல் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.
தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி, 2026-ல் மீண்டும் வென்று நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். மறுபக்கம் கடந்த 2021 தேர்தலில் 77 இடங்களில் வென்று மாநிலத்தின் எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டுவருகிறது.
பாஜக பிரச்சார வியூகம்:
மேற்குவங்க தேர்தல் பிரச்சார வியூகத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் மாற்றி அமைத்துள்ளது பாஜக. என்ன மாற்றியிருக்கிறது, தேர்தல் களத்தை எப்படி அணுகுகிறது, மக்களிடம் எப்படி நெருங்கி வருகிறது என்பன உள்ளிட்டவற்றை விரிவாக பார்ப்போம்.
2021-ல் பிரதமர் நரேந்திர மோடி, ‘திதி ஓ திதி’ என மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை திரிணாமூல், தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டது. எனவே இந்த முறை மம்தா பானர்ஜி மீது தனிப்பட்ட தாக்குதல்களை பாஜக தவிர்த்து வருகிறது.
உதாரணத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சமீபத்தில் அம்மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகால ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தான குற்றச்சாட்டுகளை புத்தகமாக வெளியிட்டார். இதில், ‘மம்தா ஜி’ என்றே அவரை அழைத்துள்ளார். மேலும், தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து, 15 ஆண்டுகால ஆட்சியின் செயல்பாடுகளைக் குறிவைப்பதில் கவனம் திரும்பியுள்ளது.
மாநிலத்தின் மைந்தர்கள்:
அதேபோல், கடந்த 2021-ல் தேசிய அளவிலான நிர்வாகிகளை பாஜக மேற்குவங்கத்தில் முன்னிலைப்படுத்தி வந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட திரிணாமூல், மாநிலத்தின் மைந்தர்கள் இல்லை என அதனை விமர்சித்தது. ஆனால், இந்த முறை அந்த விமர்சனத்திற்கு இடமில்லாத வகையில், மாநிலத்தின் நிர்வாகிகளை பாஜக முன்னிலைப்படுத்திவருகிறது.
மத ரீதியான விமர்சனம்:
பாஜக மீது பொதுவாக மத ரீதியான விமர்சனம் வைக்கப்படும். இதற்கு இந்த முறை இடம் கொடுக்காமல் களமாடிவருகிறது பாஜக. மேற்குவங்க மக்கள் தொகையில் சுமார் 30%-க்கும் அதிகமானோர் இஸ்லாமியர்களாக இருக்கின்றனர். இதன் காரணமாக சுமார் 125 தொகுதிகளின் முடிவுகளின் மீது தாக்கத்தை இஸ்லாமியர்கள் செலுத்திவருகின்றனர். இந்த முறை, பாஜக வெளிப்படையான மத ரீதியான பிரச்சாரங்களை பெரிதாக மேற்கொள்ளாமல் இருந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.
மம்தா பானர்ஜி, வங்காள அடையாளத்தை மையமாகக் கொண்டு தனது பிரச்சாரத்தைக் கூர்மைப்படுத்தியுள்ளார். பாஜகவை மாநிலத்தின் கலாச்சாரத்துடன் ஒத்திசைவற்றதாக அவர் அடிக்கடி சித்தரிக்கிறார். உள்ளூர் மக்களின் உணர்வுகள் மற்றும் அன்றாட கலாச்சார நடைமுறைகளை பிரச்சாரத்தில் பிரதானப்படுத்தும் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக அரசு மீன்களுக்குத் தடை விதிக்கும் என்ற கருத்தை முன்வைத்துவருகிறது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பாஜக தனது பிரச்சார உத்திகளை மாற்றியமைத்துள்ளது. 2021-ல் “ஜெய் ஸ்ரீ ராம்” அதன் பிரச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தியதற்கு மாறாக, தற்போது அக்கட்சி வங்காளத்தின் கலாச்சார நெறிமுறைகளுடன் ஆழமாகப் பொருந்தக்கூடிய சின்னங்களை முன்னிறுத்துகிறது. இதற்கு ஒரு குறியீட்டுப் பதிலடியாக, ஒரு பாஜக வேட்பாளர் கையில் மீனுடன் பிரச்சாரம் செய்வதும் காணப்பட்டது.
பாஜகவுக்கு கைக்குடுக்குமா?
2026-ல் பாஜகவின் பிரச்சார வியூகம் பெருமளவில் மாற்றப்பட்டதாக இருக்கும் சூழலில், இந்த அணுகுமுறை தேர்தல் வெற்றிகளாக மாறுமா என்பது வாக்குகள் எண்ணப்பட்ட பின்னரே தெரியவரும்.

