

கோலாலம்பூர் , மார்ச் 11:
நாட்டில் ‘3ஆர்’ (3R – இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள்) தொடர்பான விவகாரங்களை இன்னும் தீவிரமாகக் கையாள்வதற்காக, தற்போதைய சட்டங்களில் திருத்தம் செய்யவோ அல்லது புதிய சட்டங்களை இயற்றவோ அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இது குறித்து தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் 3ஆர் சார்ந்த வெறுப்புணர்வு மற்றும் அவதூறு கருத்துகள் பரப்பப்படுவதைத் தடுக்க, தற்போதைய சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைப்பது அவசியமாகிறது. சில தரப்பினர் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிகளைப் புறக்கணித்துச் செயல்படுவதைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தடுப்புக்காவல் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட அமலாக்க நடவடிக்கைகளைச் சிலர் மீறுவதையோ அல்லது புறக்கணிப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சரவை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சட்டத்துறைத் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், இத்தகைய சட்ட மீறல்களைத் தடுக்கும் வகையில், சட்டங்களை மறுபரிசீலனை செய்து புதிய மசோதாவை உருவாக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“3ஆர் பிரச்சினைகளைச் சமரசம் இன்றி கையாளும் வகையில், சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், தேவைப்படும் பட்சத்தில் புதிய சட்டங்களை இயற்றவும் அரசாங்கம் உறுதியுடன் உள்ளது,” என்று அமைச்சர் ஃபஹ்மி மேலும் கூறினார்.



