மட்டக்களப்பு அரசடியில் வர்த்த நிலையங்களுக்கு முன்னால் நாட்டப்பட்ட விளம்பர பலகையில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (2) அதிகாலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதுடன் மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலயத்தில் ஒரு யுவதி உட்பட 3 பேர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு 7ம் பிரிவு சமுர்த்தி வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய முகுந்தன் சந்தோஷ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தவறான முடிவு
குறித்த இளைஞன் கொழும்பில் தொழில் செய்துவரும் நிலையில் சம்பவ தினமான நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு அதே பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களுடன் பிரயாணித்து மட்டக்களப்பில் நேற்று நள்ளிரவு இறங்கியுள்ளார்.

அதனைதொடர்ந்து, சம்பவ இடத்தில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு சென்று அங்கு கடமையாற்றும் ஒருவரின் கையடக்க தொலைபேசியை வாங்கி தாய்க்கு தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின்னர் வர்த்தக நிலையம் இரவு 12.00 மணிக்கு மூடிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இன்று(02) அதிகாலையில் 6.00 மணிக்கு குறித்த வர்த்தக நிலைய கட்டிட தொகுதியில் நிர்மானிக்கப்பட்டிருந்த விளம்பர பலகை கம்பியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
இதன்படி, திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளைமேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டு பிரத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதுடன் தடவியல் பிரிவு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த நபர் அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிடத்திற்கு தீயிட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை முதலாம் திகதி இரவு 7 மணியில் இருந்து இன்று அதிகாலை 6.00 மணி வரை மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

