News by: Editor B.R.Rajan
ஜார்ஜ் டவுன்,

மடானி அரசாங்கம் வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் வழி இன்று புதியதொரு வரலாற்றைப் பதிவு செய்தது. SkyWorld வீடமைப்பு நிறுவனத்துடன் இணைந்து ரூமா பக்காட் மடானி எனும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட நாட்டிலேயே மிகப்பெரிய ஒரு வீடமைப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தது.

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 37,368 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன. இவற்றில் பினாங்கிலுள்ள செபராங் ஜெயாவில் 6,368 வீடுகளும் பத்துகவானில் 31,000 வீடுகளும் நிர்மாணிக்கப்படுகின்றன.

இந்த வீடமைப்புத் திட்டமானது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்தின் கீழ் வீடமைப்புத் துறையின் ஒரு புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது என்று வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.
12ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் வாங்கும் சக்திக்கு உட்பட்ட மொத்தம் 500,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு இலக்கு வைத்தது. 2025 மார்ச் 31ஆம் தேதி வரை 492,360 வீடுகள் அல்லது 98.5 விழுக்காடு அதன் இலக்கை எட்டியிருக்கிறது என்று அவர் சொன்னார்.

இதில் 179,769 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் 235,862 வீடுகள் தற்போது நிர்மாணிப்பில் உள்ளன. 76,729 வீடுகள் திட்ட அளவில் உள்ளன. இந்த வீடமைப்புத் திட்டத்தின் வழி மக்களுக்கு வாங்கும் தகுதிக்கு உட்பட்ட வீடுகளைக் கட்டித் தரும் மடானி அரசாங்கத்தின் இலக்கும் கடப்பாடும் நனவாகியிருக்கிறது.
வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கில் வெற்றிபெற்ற முதலாவது மலேசியப் பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திகழ்கிறார் என்று ஙா கோர் மிங் தெரிவித்தார். 
ரூமா பாக்காட் மடானி கட்டுமானத் திட்டத்தில் மூன்று முக்கிய அம்சங்களுக்கு ஸ்கை வேர்ல்ட் இணக்கம் தெரிவித்துள்ளது. வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு அந்த சொத்துடைமை நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இது சாத்தியமாகியிருக்கிறது.
1. ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் கசிவு, குழாய் அமைப்பு முறையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு 10 ஆண்டு கால உத்தரவாதத்தை இந்நிறுவனம் வழங்கியிருக்கிறது.
2. பராமரிப்பு செலவாக ஒரு சதுர அடிக்கு 0.18 சென் அல்லது மாதத்திற்கு 162 ரிங்கிட் என்ற அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு பராமரிப்புக் கட்டணத்தை ஸ்கை வேர்ல்ட் நிர்ணயித்து உறுதியளித்திருக்கிறது.
3. இந்த வீடுகள் 85 விழுக்காடு QLASSIC தரத்தில் நிர்மாணிக்கப்படுவதற்கும் ஸ்கை வேர்ல்ட் உத்தரவாதம் அளித்திருக்கிறது.
வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் நேற்று ஜூலை 19ஆம் தேதி சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு செபெராங் பிறை தாமான் பூரோங்கிற்கு எதிர்ப்புறத்தில் செபெராங் பிறை தெங்கா, ஜாலான் தோடாக்கில் ரூமா பாக்காட் மடானி வீடமைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், மலேசியாவில் இதுவரை எந்தவொரு சொத்து மேம்பாட்டு நிறுவனமும் 10 ஆண்டுகளுக்கு இவ்வளவு குறைந்த கட்டணத்தில் பராமரிப்புக் கட்டணங்களை விதித்திருக்கவில்லை. இதுபோன்ற உத்தரவாதத்தையும் வழங்கியிருக்கவில்லை. இதுதான் மடானி அரசாங்கம் மக்களுக்கு வழங்கியிருக்கும் ஓர் அபூர்வ விவேகத் திட்டமாகும் என்று குறிப்பிட்டார்.

பராமரிப்பு செலவுகளைப் பொறுத்தவரை வீட்டு உரிமையாளர்கள் ஜிம், விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளம் போன்ற கிளப் ஹவுஸ் வசதிகளைப் பயன்படுத்தும்போதுதான் கூடுதல் தொகையை வழங்க வேண்டியிருக்கும். இது ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் கட்டணம் என்ற அடிப்படையில் ஒரு
குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

ரூமா பாக்காட் மடானி திட்டமானது மலேசியாவில் IBS 3D தொழில் நுட்பத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் முதலாவது திட்டமாகும். இந்த நிர்மாணிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு முழுமையாக வர்ணம் பூசப்பட்ட பின்னர் கட்டுமானப் பகுதிக்கு அனுப்பப்பட்டு அங்கு அவை பொருத்தப்படும். இதன்வழி கட்டுமானப்பணி காலம் குறைவதோடு உயர் தரத்திலான நிர்மாணிப்பையும் காண முடியும் என்று ஐ.நா. வாழ்விட பொதுப் பேரவைத் தலைவருமான ஙா கோர் மிங் குறிப்பிட்டார்.
ஐ.நா. வாழ்விட பொதுப் பேரவைத் தலைமைப் பொறுப்பை மலேசியா ஏற்றிருக்கின்ற நிலையில் ஸ்கை வேர்ல்ட் ஹெல்த்தி ஹோம் எனும் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது இயற்கை வெளிச்சத்தைக் கொண்டு வருவதோடு தூய்மையான காற்றையும் மக்கள் சுவாசிப்பர். பசுமை சமூக இடங்களும் இத்திட்டத்தில் இடம்பெறும்.

ரூமா பாக்காட் மடானி 225,000 ரிங்கிட் முதல் 420,000 விலைகளுக்கு இடையில் விற்கப்படும். 900 சதுர அடிகளைக் கொண்ட ஒவ்வொரு வீட்டிலும் மூன்று படுக்கை அறைகளும் 2 குளியலறைகளும் இருக்கும்.
நீச்சல் குளம், ஜிம்னாசியம், பூப்பந்து மைதானம், பிக்கல் போல், பலநோக்கு மண்டபம், பாலர் பள்ளி, சூராவ், அங்காடிக் கடைகள், பல்நோக்குக் கடைகள், சிறார் விளையாட்டுப் பூங்கா ஆகியவையும் இத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும்.
இந்த வீடமைப்புத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிறைவு செய்து வைத்தார். உடன் பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோ, பினாங்கு மாநில முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், ஸ்கை வேர்ல்ட் நிர்வாகத் தலைவர் டத்தோஸ்ரீ இங் தியென் பிங், ஸ்கை வேர்ல்ட் தலைமைச் செயல் அதிகாரி லீ சீ செங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




