Last Updated:
மசோதா விவகாரத்தில் ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என 14 கேள்விகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தல், ஒப்புதலை நிறுத்தி வைத்தல், மசோதாவை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்புதல் அல்லது சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்புதல் என நான்கு விருப்பங்கள் ஆளுநருக்கு உள்ளதாகவும், மசோதா மீது முடிவெடுக்கு ஆளுநருக்கு காலக்கெடு எதுவும் கிடையாது என்றும் வாதிட்டார்.
மாநில அரசின் மசோதா ஜனநாயகத்திற்கு விரோதமாகவோ அல்லது அடிப்படை உரிமையை மீறும் வகையிலோ இருந்தால் அதனை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மாநில அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் அல்ல என்றும் ஆளுநருக்கு அரசமைப்பு வழங்கிய அதிகாரத்தை உச்சநீதிமன்றம் தடுக்க முடியாது என்றும் துஷார் மேத்தா வாதிட்டார். இதனைக் கேட்ட நீதிபதிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் ஆளுநரின் தயவில் உள்ளதா என்று காட்டமாக கேள்வியெழுப்பினர். தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையே, மசோதா விவகாரத்தில் ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என 14 கேள்விகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஹரீஷ், அரசியலமைப்பு சட்ட விதிமுறைகள் படி, இந்த மனுவை திருப்பி அனுப்புவதை தவிர வேறு வழி கிடையாது என்றும் அனைத்து 14 கேள்விகளுக்கும் தற்போதைய தீர்ப்பிலும், முந்தைய தீர்ப்புகளிலும் தெளிவாக பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் குடியரசுத் தலைவரின் விருப்புரிமை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், மசோதா விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரின் அதிகாரம் குறித்து முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து விளக்கம் வேண்டுமானால் தரலாம். ஆனால், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்ற முடியாது என தெரிவித்தனர்.
Delhi,Delhi,Delhi
August 21, 2025 7:12 AM IST


