Last Updated:
நாடு முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த விளக்கு ஏற்றும் நிகழ்வுகளும் சேவை நடவடிக்கைகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று, நாடு முழுவதிலும் இருந்து அவருக்குப் பல்வேறு தலைவர்களும் மக்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பாடகி ஸ்நேகா சங்கர் மற்றும் கலைஞர் அமன் பந்த் இணைந்து உருவாக்கிய ‘ஆசீர்வாத் கா தியா’ என்ற சிறப்புப் பாடல் பிரதமருக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.
இப்பாடலையும் இந்த முயற்சியையும் பாராட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளத்தில், “சில அன்பின் வெளிப்பாடுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ‘ஆசீர்வாத் கா தியா’ எனும் இந்த முயற்சி எனது மனதை ஆழமாகத் தொட்டுள்ளது. மக்களின் ஒவ்வொரு ஆசீர்வதிக்கப்பட்ட நல்வாழ்த்துகளும், நமது நாட்டிற்கு இன்னும் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவை செய்வதற்கான எனது உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2001-இல் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், 2014-இல் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்று இன்று வரை தொடரும் அவரது 25 ஆண்டுகால பொதுச் சேவையைச் சிறப்பிக்கும் வகையில் இந்தச் சிறப்புப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
அகல் விளக்கின் ஒளியை மையக் கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த வீடியோ, பாஜகவின் பிறந்தநாள் பிரச்சாரத்தின் பின்னணியைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பிரச்சாரத்தின் கீழ், இன்று மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் நாட்டின் அனைத்து மக்களும் தங்களது வீடுகளில் அகல் விளக்கு (தியா) ஏற்றி, பிரதமரின் நீண்ட ஆயுளுக்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் இது குறித்துப் பேசுகையில், “மக்களுக்குச் செய்யும் சேவையே நாட்டிற்குச் செய்யும் சேவை என்ற கொள்கையை வகுத்துச் செயல்படும் பிரதமர் மோடி, பல சவாலான சூழ்நிலைகளைக் கடந்து எளிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவரும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். எனவே, நானும் அகல் விளக்கு ஏற்றிப் பிரார்த்திக்கிறேன்; மக்களும் இதில் பங்கேற்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Some gestures remain very special! #AshirwadKaDiya is one such expression of affection that has deeply touched me.
Every blessing strengthens my resolve to serve our beloved Bharat with even greater devotion. https://t.co/YPgIUibiMW— Narendra Modi (@narendramodi) September 17, 2026
‘ஆசீர்வாத் கா தியா’ பிரச்சாரத்துடன் மட்டுமல்லாமல், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்கு ‘சேவா சங்கல்ப் அபியான்’ (Seva Sankalp Abhiyan) என்ற மக்கள் சேவைத் திட்டத்தையும் பாஜக தொடங்கியுள்ளது. இதன் கீழ் நாடு முழுவதும் இரத்த தான முகாம்கள், தூய்மைப் பணிகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பல்வேறு பொதுமக்களுக்கான சேவை நடவடிக்கைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த விளக்கு ஏற்றும் நிகழ்வுகளும் சேவை நடவடிக்கைகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன


