மகா சிவராத்திரி இந்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி அமைந்துள்ளது. இந்த நாளில் சிவபெருமானின் லிங்க ரூபத்தை வழிபடுவது சிறப்பு. அதோடு சிவலிங்கத்திற்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபடுவது மிக உயர்ந்த, உன்னதமான பலன்களை தரும்.
ருத்ரன் என்பது சிவபெருமானை குறிப்பிடுவதாகும். சிவனுக்கு 11 வகையான புனித பொருட்களைக் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்திற்கு ருத்ராபிஷேகம் என்று பெயர். வேத மந்திரங்கள் முழங்க செய்யப்படும் இந்த அபிஷேகமே சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான வழிபாடாக கருதப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று சிவனுக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபடுவதால் விருப்பங்கள் நிறைவேறும். செல்வ செழிப்பு ஏற்படும். நோய்கள் நீங்கும். மன அமைதி கிடைக்கும். தீய சக்திகள், தடைகள் விலகும்.

மகா சிவராத்திரி வழிபாடுகள் மாலை 06.11 மணிக்கு துவங்கி, மறுநாள் காலை 06.59 மணி வரை நடைபெறும். இந்த சமயத்தில் எப்போது வேண்டுமானாலும் ருத்ர அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம். வீட்டில் சிவ லிங்கம் வைத்து வழிபடுபவர்கள், இந்த வழிபாட்டினை செய்யலாம்.
ருத்ராபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் :
1. சுத்தமான தண்ணீர், 2. தயிர், 3. தேன்,4. பன்னீர், 5. கரும்புச்சாறு, 6. பால், 7. கொம்பு, 8. வில்வ இலைகள், 9. தூபம், 10. தேங்காய், 10. தேங்காய், 12. கற்பூரம், 13. வெற்றிலை, பாக்கு, 14. விளக்கு, 15. திரி, 16. ஊதுபத்தி, 17. உலர் பழங்கள், 18. இனிப்புகள், 19. பழங்கள், 20. ஊமத்தம்பூ
ருத்ராபிஷேகம் செய்யும் முறை :
முதலில் பூஜைக்கான பொருட்களை சுத்தமாக கழுவி எடுத்துக் கொண்டு பூஜைக்கு தயாராக வேண்டும். தண்ணீர், அக்ஷதை, மலர்கள் ஆகியவற்றை கையில் வைத்துக் கொண்டு, நீங்கள் எந்த காரியம் நடைபெறுவதற்காக ருத்ராபிஷேகம் செய்கிறோர்களோ அந்த வேண்டுதலை மனதில் நினைத்து, சிவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். முதலில் விநாயகரை வழிபட்டு விட்டு, பிறகு சிவன், முருகன், நந்தி ஆகியோரை மனதார நினைத்து வழிபட்டு விட்டு அபிஷேகத்தை துவக்க வேண்டும்.

முதலில் ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பிறகு பால், தயிர், நெய், கரும்புச்சாறு என ஒவ்வொரு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்யும் போது மனதிற்குள் விடாமல் “ஓம் நம சிவாய” மந்திரத்தையோ அல்லது மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தையோ சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அபிஷேகம் முடித்த பிறகு சிவலிங்கத்தை நன்கு துடைத்து விட்டு அலங்காரம் செய்ய வேண்டும். சிவலிங்கத்திற்கு சந்தனத்தால் திலகம் இட்டு, தீப தூப ஆராதனைகள் காட்டி வழிபட வேண்டும்.
அபிஷேகம், பூஜையில் ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால் அதை மன்னித்து அருள வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டு, பழங்கள், இனிப்புகள் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து, அந்த பிரசாதத்தை அனைவருக்கும் அளிக்க வேண்டும்.




