உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால் அப்பகுதியில் ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என்று அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ரூ.2 லட்சம் கோடி வர்த்தகத் தொகையைக் கடந்துவிட்டதால், தற்போது எதிர்பார்ப்பு ரூ.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரிகள் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார நிகழ்வுகளில் ஒன்றாக மகா கும்பமேளா மாறியிருப்பதாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு பொதுச் செயலாலரும், சாந்தினி செளக் தொகுதி எம்பியுமான பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக 6 வாரங்களாக நடைபெற்று வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா கும்பமேளா கடந்த 37 நாள்களாக பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில் இதுவரை 56 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

