மகாராஷ்டிராவில் முதற்கட்டமாக நகராட்சிகள், பேரூராட்சிகள் என 288 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 207 இடங்களை கைப்பற்றியது.
இதன் தொடர்ச்சியாக, மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளில் உள்ள 2,869 வார்டுகளுக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்று 54.77 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இதில் மாநகராட்சிகளுக்கு ஏற்ப கூட்டணிகள் மாறி இருந்ததால், தேர்தல் முடிவுகள் மீது நாடு முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
குறிப்பாக, பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அங்கம் வகித்த ஆளும் மகாயுதி கூட்டணிக்குள்ளேயே மும்பை, புனே, பிம்பரியில் போட்டி நிலவியது. அதாவது, புனே மற்றும் பிம்பரியில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸூம், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸூம் கை கோர்த்தன. அதே போன்று மும்பையில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்து களம் கண்டது.
எதிரணியான மகா விகாஸ் அகாதியில் மும்பை மாநகராட்சியை குறி வைத்து, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இணைந்து களம் இறங்கினர். காங்கிரஸ் கட்சி, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியுடன் கூட்டணி அமைத்தது.
மும்முனை போட்டி நிலவிய நிலையில், தேர்தல் முடிவில் ஆளும் பாஜக- சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 29 மாநகராட்சிகளில் பாஜக கூட்டணி 25 இடங்களை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக, தேசிய அளவில் வருவாய் மிகுந்த மாநகராட்சியான மும்பையை சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக கைப்பற்றியது.
மும்பை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 227 வார்டுகளில் பெரும்பான்மையை நிரூபிக்க 114 கவுன்சிலர்கள் தேவை. இதில், 89 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான ஷிண்டேவின் சிவசேனா 29 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம், மகாயுதி கூட்டணிக்கு அறுதி பெரும்பான்மை கிட்டியுள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 65 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராஜ் தாக்கரேவின் எம்.என்.எஸ். 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 24 வார்டுகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
மும்பை மாநகராட்சியில் 38 விழுக்காடு மராத்தியர்கள் உள்ள நிலையில், வட இந்திய மற்றும் தென் இந்திய மக்களின் எண்ணிக்கை கூட்டாக 56 சதவிகிதம் உள்ளது. இந்நிலையில், பரப்புரையின் போது ராஜ் தாக்கரே, வட மற்றும் தென் மாநில மக்களை அவமதிக்கும் வகையில் பேசியது தேர்தல் முடிவில் எதிரொலித்து இருப்பதாக கருதப்படுகிறது. அதே சமயம், இந்து மற்றும் மராத்தியர்களே மும்பை மேயராக இருப்பார்கள் என்று பாஜக அளித்த வாக்குறுதியும் கை கொடுத்து இருப்பதாக தெரிகிறது.
இதே போன்று, நவி மும்பை, புனே, நாக்பூர், தானே, நாசிக் என 25 மாநகராட்சிகளில் பாஜக கூட்டணி வெற்றி வாகை சூடியுள்ளது. தானேவில் ஒரு வார்டுகளில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.
லத்தூர், சந்திரபூர் மாநகராட்சிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், பர்பாணி மற்றும் வாசை விராரில் உத்தவ் தாக்கரே கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
ஒட்டு மொத்தமாக 29 மாநகராட்சிகளில் உள்ள 2,869 வார்டுகளில் பாஜக 1,372 இடங்களிலும், ஷிண்டேவின் சிவசேனா 394 வார்டுகளிலும், காங்கிரஸ் 315 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் காங்கிரஸை விட 4 மடங்கும், ஷிண்டேவின் சிவசேனாவை விட 3 மடங்கும் அதிக வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் டபுள் என்ஜின் சர்க்கார் என்று பரப்புரை செய்த பாஜக, உள்ளாட்சி தேர்தலில் டிரிபிள் என்ஜின் சர்க்கார் என்று பரப்புரை முன்வைத்து வெற்றி கண்டுள்ளது. அதே சமயம், மை-க்கு பதிலாக மார்க்கர் பேனா மூலம் மை இடப்பட்டது உள்ளிட்ட சர்ச்சைகளுக்கும் பஞ்சமின்றி மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

