வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரமாகவே உள்ளது. வாக்குச்சாவடி இருக்கும் இடம், காலநிலை, விடுமுறை, வேலை, முகவரி மாற்றம் போன்றவையும் வாக்களிப்பதை முடிவு செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், ஒரு தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரிப்பதற்கும் குறைவதற்கும், எந்தக் கட்சி வெற்றி பெறுகிறது என்பதற்கும் என்னதான் காரணமும் ஒற்றுமையும் இருக்கிறது என்பது இதுவரை அறியப்படாததாகவே இருந்துள்ளது.
1995ஆம் ஆண்டு 71 சதவீத வாக்குகள் பதிவான போது மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து சிவசேனை – பாஜக கூட்டணிக்கு ஆட்சி மாற்றம் நடந்தது. மிகக் குறைந்த வாக்குப்பதிவு நடந்த 2009ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்படவில்லை. அதே 2019ஆம் ஆண்டு 60 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
வாக்குப்பதிவு விவகாரம் இப்படியிருக்க, ஏற்கனவே ஆளுங்கட்சியின் மகாயுதி கூட்டணி, 2024 மக்களவைத் தேர்தலில் மகா விகாஸ் கூட்டணியிடம் தோல்வியைத் தழுவியது. இந்த போக்கு, பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என மகா விகாஸ் கூட்டணி நம்பிக்கையோடு இருக்கிறது.
ஆனால், மகாராஷ்டிரத்தில் எப்போதெல்லாம் வாக்குப்பதிவு அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் பாஜகதான் பலன் பெற்றிருக்கிறது என்கிறார் மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ்.
இதனிடையே, பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் பாஜக – சிவசேனை – தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கூறியிருக்கின்றன. சில கருத்துக் கணிப்புகள் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று சொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கதுதான். ஒரு கணிப்புத்தான் மகா விகாஸ் யுதிக்கு ஆதரவாக அமைந்திருக்கிறது. ஆனால், மக்களின் எண்ணங்களை இந்த கருத்துக் கணிப்புகள் உண்மையிலேயே கணித்திருக்கின்றதா என்பதை இப்போதைக்கு உறுதி செய்ய யாராலும் இயலாது.
அடுத்த முதல்வரை உறுதி செய்வதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவிருக்கும் நிலையில், அந்த பரபரப்பு ஒரு பக்கம் ஏற்பட்டிருந்தாலும், மறுபக்கம், மகாயுதி மற்றும் மகா விகாஸ் அகாதி அணிகளுக்குள் யார் அடுத்த முதல்வர் என்ற அரியணைக்கான போட்டியும் சலசலப்பும் ஏற்கனவே தொடங்கிவிட்டிருக்கிறது. இரு கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், தங்கள் கட்சித் தலைவர்களே அடுத்த முதல்வர் என்று கூறி வருகிறார்கள். புனேவில், அடுத்த முதல்வர் அஜித் பவார் என்று பேனரே வைத்துவிட்டார்கள். சர்ச்சையானதைத் தொடர்ந்து அது அகற்றப்பட்டது. இந்தக் கூட்டணியில், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னவீஸ், அஜித் பவார் அனைவருமே முதல்வர் போட்டியில் உள்ளனர்.
மகாவிகாஸ் கூட்டணியில் காங்கிரஸ் மாநில தலைவர் நானா படேல், உத்தவ் தாக்கரே ஆகியோர் முதல்வர் போட்டியில் இருந்தாலும், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக்குப் பிறகே முதல்வர் வேட்பாளர் தேர்வு என்று உத்தவ் தாக்கரே தரப்பிலிருந்து பதிலாக வருகிறது.
மகாராஷ்டிர தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நவம்பர் 23ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதனை தேர்தல் ஆணையம் உடனுக்குடன் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவிருக்கிறது.

