Last Updated:
மாண்டியாவில் மகள் கொலை செய்யப்பட்டதால் ஆத்திரத்தில் இருந்த தந்தை வெங்கடேஷ், கொலையாளி நிதீஷின் தந்தை நரசிம்மகவுடாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் மகள் கொலை செய்யப்பட்டதால் கடும் ஆத்திரத்தில் இருந்த தந்தை, கொலையாளியின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்து இருக்கிறார்.
கர்நாடக மாநிலம் மாண்டியாவின் பாண்டவபூர் மாணிக்யனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவரது மனைவி தீபிகா. 28 வயதான தீபிகா மேலுகோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி வேலைக்கு சென்ற தீபிகா, வீட்டிற்கு திரும்பி வரவில்லை. நான்கு நாட்கள் கழித்து அவரது உடல், மேலுகோட் நரசிம்ம சுவாமி கோவில், மலை அடிவாரத்தில் பாதி புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் மாணிக்யனஹள்ளி கிராமத்தை சேர்ந்த 22 வயதான நிதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தீபிகாவும், நிதீஷும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், நிதிஷை தன் தம்பி என்று தீபிகா கூறி வந்தார். குடும்பத்தினர் எச்சரித்ததால் நிதீஷுடன் பேசுவதை தீபிகா கைவிட்டு இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த நிதீஷ், தீபிகாவின் கழுத்தை நெரித்து கொன்று குழி தோண்டி புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. சிறையில் இருந்த நிதீஷ், சில மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்தார்.
நிதீஷ் சகோதரிக்கும், ஒரு இளைஞருக்கும் வருகிற 11ம் தேதி தர்மஸ்தாலா மஞ்சுநாதா கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை நிதீஷ் குடும்பத்தினர் செய்து வந்தனர். இந்த நிலையில் நிதீஷ் தந்தையும், விவசாயியுமான நரசிம்மகவுடா மாணிக்யனஹள்ளி கிராமத்தில் உள்ள டீ கடைக்கு சென்று டீ குடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தீபிகாவின் தந்தை வெங்கடேஷ், நரசிம்மகவுடாவிடம் பேச்சுக் கொடுத்து இருக்கிறார்
என் மகளை உன் மகன் கொன்று விட்டான்.. உன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து, நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டுமா?” என்று கேட்டு நரசிம்ம கவுடாவிடம், வெங்கடேஷ் தகராறு செய்துள்ளார் அப்போது ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நரசிம்மகவுடாவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே நரசிம்மகவுடா உயிரிழந்து விட்டார்
இதை பார்த்து தேநீர் கடைக்கு வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்த பாண்டவபூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நரசிம்மகவுடா உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும், தலைமறைவாக உள்ள வெங்கடேஷை தேடி வருகின்றனர். பழிக்கு, பழியாக நடந்த இந்த கொலை, மாணிக்யனஹள்ளி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
May 07, 2025 10:48 PM IST


