மகளிர் உரிமை தொகை ரூ.2,500ஆக உயர்வது எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட குட் நியூஸ்
தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் மகளிர் உரிமை தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையாக மகளிரின் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது.
தொடக்கத்தில் சுமார் ஒரு கோடி பேர் இந்த திட்டத்தில் பயன் பெற்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது 1.30 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமை தொகையை பெறுகின்றனர். இந்த சூழலில் தான் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்து தற்போது ஆட்சி செய்து வருகிறது. முன்னதாக தேர்தலின் போது தவெக சார்பில் தங்களுடைய அரசு பொறுப்பேற்றால் மாண்புமிகு மகளிர் என்ற பெயரில் பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் பணம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை விஜய் அரசு எப்போது நிறைவேற்றும் என கோடிக்கணக்கான பெண்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
தற்போதைக்கு விஜய் அரசு திமுகவின் மகளிர் உரிமை தொகை திட்டத்தை நிறுத்தாமல் தொடர்ச்சியாக பெண்களுக்கு மாதம் 1000 ரூபாயில் கணக்கில் வரவு வைத்து வருகிறது. இதனை எப்போது 2500 ரூபாயாக உயர்த்தும் என பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 2500 ரூபாய் மாண்புமிகு மகளிர் திட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.
தேர்தல் களத்தில் பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் தங்கள் அரசின் முக்கிய நோக்கம் என குறிப்பிட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி, மகளிர் உரிமை தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். கண்டிப்பாக பெண்களுக்கு இந்த தொகை கிடைக்கும் என அவர் உறுதியளித்தார்.
தவெக அரசு அண்மையில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் சீர் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இது செப்டம்பரில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இன்னும் தமிழ்நாட்டின் முழு நீள பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே பட்ஜெட்டில் இந்த திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

