Last Updated:
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை 21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்தும் நோக்கில், லோக்சபா இடங்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் மூலம் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதன் அடிப்படையில் உயர்த்தப்படும் 850 இடங்களில் சுமார் 273 இடங்கள் பெண் எம்.பி-க்களுக்காக ஒதுக்கப்படும். இதில் மாநிலங்களுக்கு 815 இடங்களும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 இடங்களும் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
முதலில் இந்தச் சட்டம் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகே அமலாகும் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது 2021-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு தள்ளிப்போயுள்ளதால், 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையிலேயே தொகுதிகளை மறுவரையறை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 2029 பொதுத்தேர்தலிலேயே பெண்கள் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய முடியும்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களுக்குத் தொகுதி மறுவரையறையால் இடங்கள் குறையும் என்ற அச்சம் இருந்தது. இதைத் தவிர்க்க, அனைத்து மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவம் பாதிக்காத வகையில் விகிதாச்சார அடிப்படையில் இடங்களை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றச் சிறப்புச் கூட்டத்தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதா நகல் எம்.பி-க்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் பேசி, பெண்களின் நலன் கருதி இதற்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது இடங்கள் மட்டுமின்றி, பட்டியல் சமூகத்தினருக்கான (SC) இடங்கள் 84-லிருந்து 126/136 ஆகவும், பழங்குடியினருக்கான (ST) இடங்கள் 47-லிருந்து 70 ஆகவும் உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை 21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசின் அதிரடித் திட்டம்! 2029 பொதுத் தேர்தலில் முக்கிய மாற்றம்..

